ஹார்முஸை அடுத்து இன்னொரு நீரிணையும்... ஈரான் போரில் கட்டளைக்குக் காத்திருக்கும் ஹவுதிகள்
ஈரான் மீதான போரை அடுத்து ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், இன்னொரு முக்கிய நீரிணையான Bab el-Mandeb மூடும் நெருக்கடி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Bab el-Mandeb நீரிணை
ஈரான் மீதான போரில் இதுவரை ஏமனின் ஹவுதிகள் இணையாமல், அமைதி காத்து வருகின்றனர். ஈரான் மட்டுமே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக பதில் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

காஸா மீது அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹவுதிகள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் தற்போது ஈரான் மீதான போரில் ஏன் இன்னும் ஹவுதிகள் களமிறங்கவில்லை என்ற கேள்வியை சர்வதேச ஊடகங்கள் முன்வைத்து வருகிறது.
ஆனால், ஈரானால் நீண்ட காலமாகப் பின்னிருந்து ஆதரிக்கப்பட்டு, ஆயுதமளிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வரும் ஏமனைத் தளமாகக் கொண்ட ஹவுதிகள், போரில் இணைவார்களாயின், மற்றொரு முக்கிய நீர்வழியான Bab el-Mandeb நீரிணை முடக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என்றே கூறுகின்றனர்.
ஏற்கனவே ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் சூழலில், இது உலக வர்த்தகத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்றே அஞ்சுகின்றனர். ஈரான் மீதான போரில் இருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் விலகி இருக்கும் ஹவுதிகள், எப்போது வேண்டுமானாலும் களமிறங்கலாம் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
சூழ்நிலை கோரினால், எந்த நேரத்திலும் பதிலளிக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவே ஹவுதிகள் கூறியுள்ளனர். மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் மூன்று கட்ட உத்தியின் ஒரு பகுதியாக ஹவுதிகள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், ஈரானின் முதன்மையான செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், ஹவுதிகளும் பிற ஆதரவுக் குழுக்களும் ஈரானின் கட்டளைக்காக காத்திருப்பதாகவும், அமெரிக்க இராணுவம் ஈரானில் படையெடுப்பை முன்னெடுக்கும் அந்த கட்டத்தில் களமிறக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
விளைவு மிகவும் கடுமையாக
அத்துடன், Bab el-Mandeb நீரிணை முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் உள்ள இந்த நீரிணை, செங்கடல் வழியாக சூயஸ் கால்வாயை அணுகும் கப்பல்களுக்கான போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறது.

ஹார்முஸ் நீரிணை போலவே Bab el-Mandeb நீரிணையும் கப்பல் போக்குவரத்திற்கு சமமான முக்கியமான கடல் பாதையாகும். பாப் எல்-மண்டேப் நீரிணை செங்கடலையும், இந்தியப் பெருங்கடலையும் மத்தியதரைக் கடலுடனும், மேலும் அட்லாண்டிக் பெருங்கடலுடனும் இணைக்கிறது.
இந்தப் பாதை ஆசிய-ஐரோப்பா வர்த்தகத்திற்கு மிக முக்கியமானதாகும். ஹவுதிகள் இந்த நீரிணையை முடக்கினால், பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் நீரிணை போரின் மத்தியில் முடக்கப்பட்ட நேரத்தில், விளைவு மிகவும் கடுமையானதாக இருக்கலாம் என்றே நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த இரண்டு நீரிணையும் சேர்ந்து உலகின் கடல்வழி எண்ணெயில் தோராயமாக 30 சதவீதத்தை அனுமதிக்கிறது. மேலும் சூயஸ் கால்வாய் வழியாக ஆசிய-ஐரோப்பா கடல்சார் வர்த்தகத்தின் பெரும்பகுதியைக் கையாளுகிறது.
ஈரான் மீது மிக மோசமான தாக்குதல் நடத்தப்படும் என்றால், அல்லது போரில் சவுதி அரேபியா களமிறங்கும் என்றால், கப்பல் போக்குவரத்தை குறிவைப்போம் என ஹவுதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |