ஹவுதிகளால் சேவையை நிறுத்திய சவுதி அரேபிய விமான நிலையம்
ஹவுதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் தனது சேவையை நிறுத்தியது.
ஏமனில் உள்ள ஹவுதிகள் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு விமான நிலையத்தைத் தாக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிரியின் முக்கிய இலக்கு
கடந்த மாதம், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா மீது ஹவுதிகள் கடல்வழி முற்றுகையை அறிவித்தனர்; அதன்பின்னர், எண்ணெய் கப்பல்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான பல தாக்குதல்களுக்குத் தாங்களே காரணம் என்றும் அவர்கள் உரிமை கோரியுள்ளனர்.

இதனையடுத்து ஹவுதி நிலைகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதன் மூலம் சவுதி அரேபியா பதிலடி கொடுத்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, செவ்வாய்க்கிழமையன்று, ட்ரோன் ஒன்றைப் பயன்படுத்தி நஜ்ரான் விமான நிலையத்தில் உள்ள சவுதி எதிரியின் முக்கிய இலக்கு ஒன்றை வெற்றிகரமாகத் தாக்கியதாகத் தெரிவித்தார்.
சவுதி எதிரி தரப்பு ட்ரோன்களைப் பயன்படுத்தி சாதா மற்றும் ஹஜ்ஜா மாகாணங்களின் வான்வெளியை மீறியதற்குப் பதிலடியாகவே தெற்குப் பகுதியில் உள்ள விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
விமான நிலையத்தின் முக்கிய ரேடார் தாக்கப்பட்டதால், செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களுக்குத் திட்டமிடப்பட்ட விமானங்களின் நிலையை விமான நிலைய இணையதளம் 'தெரியவில்லை' என்று குறிப்பிட்டிருந்தது.
இதுவே முதல் முறை
யேமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அந்தச் சிறிய விமான நிலையத்தில் ஒரே ஒரு முனையம் மட்டுமே உள்ளது; இது நாளொன்றுக்குச் சில விமானங்களை மட்டுமே கையாளுகிறது.
கடந்த மாதம் மோதல்கள் வெடித்த நிலையில்; 2022-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, சவுதி அரேபியாவும் ஹவுதிகளும் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும்.

ஹவுதிகள் ஏமன் தலைநகர் சனாவைக் கைப்பற்றி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றியதைத் தொடர்ந்து, 2015 முதல் சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி ஒன்று ஹவுதிகளுடன் போரில் ஈடுபட்டு வந்தது.
சவுதி அரேபியாவுக்கும் ஹவுதிகளுக்கும் இடையே மீண்டும் வெடித்துள்ள மோதல்கள், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் எவ்வாறு பரவியுள்ளது என்பதற்கு ஒரு உதாரணமாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |