ஈரானுக்குள் அமெரிக்க இராணுவம் நுழைந்ததும்... மூடப்படும் அபாயத்தில் இன்னொரு நீரிணை
ஈரானுக்குள் பல வாரங்கள் நீடிக்கும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஹார்முஸ் போன்று இன்னொரு முக்கியமான நீரிணையும் முடக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
கடுமையான இடையூறாக
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைவரின் கவனமும் தற்போது தெற்கு நோக்கி, செங்கடலில் அமைந்துள்ள மற்றொரு குறுகிய நீர்ப்பகுதியான பாப்-எல்-மண்டேப் நீரிணையின் பக்கம் திரும்பியுள்ளது.

செங்கடலின் தென்முனையில் அமைந்துள்ள இந்த நீரிணை முடக்கப்பட்டால், நவீன வரலாற்றிலேயே உலக எரிசக்திச் சந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் மிகக் கடுமையான இடையூறாக இருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஈரான் போரில் ஒரு மாதத்திற்கு பிறகு களத்தில் குதித்துள்ள ஹவுதிகளால், தற்போது மிக மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்றே கூறுகின்றனர். ஹவுதிகள் கட்டுப்பாட்டிலேயே இந்த நீரிணை உள்ளது.
ஹார்முஸ் நீரிணை ஒரு பெரிய எண்ணெய் சார்ந்த அதிர்ச்சிப் புள்ளி என்றால் பாப்-எல்-மண்டேப் நீரிணை என்பது மிகப்பெரிய அளவிலான வர்த்தகம் சார்ந்த அதிர்ச்சிப் புள்ளி என்றே குறிப்பிடுகின்றனர்.
இந்த பாப்-எல்-மண்டேப் நீரிணை செங்கடலை ஏடன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. ஏறக்குறைய 100 கிலோமீற்றர் நீளமும் 30 கிலோமீற்றர் அகலமும் கொண்ட இந்த நீரிணை, அரேபியத் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஏமனை, ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் உள்ள ஜிபூட்டி மற்றும் எரித்திரியாவிடமிருந்து பிரிக்கிறது.
ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே பயணிக்கும் கப்பல்கள், சூயஸ் கால்வாயை அடைவதற்கு இந்த நீரிணை வழியாகவே கடந்து செல்ல வேண்டும்; இதுவே இதனை உலகின் மிகவும் பரபரப்பான மற்றும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக ஆக்குகிறது.

ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டால்
உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிகளில் சுமார் 10 முதல் 12 சதவீதம் வரை பாப்-எல்-மண்டப் வழியாகச் செல்கின்றன. ஆனால், ஹவுதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நீரிணை முடக்கப்படுவதாக அறிவிக்க வேண்டியதில்லை என்றும், ட்ரோன் அல்லது ஏவுகணை அச்சுறுத்தல் இருப்பதாக கசியவிடும் தகவல்களே கப்பல் போக்குவரத்தை முழுமையாக முடக்கிவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இரண்டு நீரிணையும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் எண்ணெய்த் துறைக்கு அப்பாலும் விரிவடைந்து, மிக விரிவான கடல்சார் வர்த்தக இடையூறுப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்கிறார்கள்.

இதனிடையே, ஈரான் மீதான எந்தவொரு நெருக்கடியும் அதற்கேற்ற பதிலடியை அளிக்கத் தூண்டும் என அந்த நாட்டின் இராணுவ அதிகாரி ஒருவர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், அமெரிக்கா தற்போது தரைப்படையை ஈரானில் களமிறக்கும் என்றால், ஈரானின் அடுத்த நகர்வு பாப்-எல்-மண்டேப் நீரிணையை முடக்குவதாக இருக்கும் என்பதுடன், ஈரான் ஆதரவு ஹவுதிகள் மற்றும் ஹிஸ்புல்லா படைகளும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போரிடும் மிக மோசமான சூழல் உருவாகும் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |