ஈழத்தமிழர்கள் மீதான பற்று - பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்த பாரதிராஜா
ஈழத்தமிழர்கள் பிரச்சினை காரணமாக பாரதிராஜா பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்துள்ளார்.
பாரதிராஜா உடல் அடக்கம்
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாரதிராஜா நேற்று உடல்நலக்குறைவால் தனது 84 வது வயதில் காலமாகியுள்ளார்.

இன்று பாரதிராஜாவின் உடல் சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்குள்ள அவரது பண்னை வீட்டில் இன்று அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பாரதிராஜா அவரது சினிமா பணிகளுக்காக மட்டுமல்லாமல், பொதுப்பிரச்சனைகளுக்காக அவர் குரல் கொடுத்ததற்காவும் நினைவு கூறப்படுகிறார்.
காவேரி பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை போன்ற தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளின் போது திரைத்துறையினரை திரட்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி, ஐபிஎல் போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பத்மஸ்ரீ விருதை திருப்பி வழங்கிய பாரதிராஜா
2004 ஆம் ஆண்டு பாரதிராஜாவை கௌரவிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலைக்கு இலங்கை அரசுக்கு அன்றைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு உதவுவதை கண்டித்து, பத்மஸ்ரீ விருதை திருப்பி வழங்கினார். மேலும், ராமேஸ்வரத்தில் திரைத்துறையினர்களை ஒன்று திரட்டி பாரிய போராட்டத்தை முன்னெடுத்தார்.

அன்றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை வந்த போது அவருக்கு எதிராக கருப்புகொடி காட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, அப்போதைய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை ஜெமினி பார்சன் வளாகத்தில் உள்ள பாரதிராஜாவின் சினிமா எடிட்டிங் மற்றும் டப்பிங் ஸ்டுடியோவில் நுழைந்து அங்குள்ள அறைகளை அடித்து நொறுக்கினார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் அழைப்பின் பேரில், போர் நிறுத்த காலத்தில் இலங்கைக்கு சென்று அங்கு அவரை நேரில் சந்தித்து உரையாடியதோடு, மாவீரர் தின நிகழ்விலும் கலந்து கொண்டார்.
உலகத்தமிழருக்கு தமிழன் என்ற அடையாளத்தை தந்தவர்கள் ஈழத்தமிழர்கள். உலகெங்கும் வியாபித்துள்ள ஈழத்தமிழர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும் என பேசினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |