அவசரநிலையை அறிவித்த ஜனாதிபதி... போராட்டங்களை ஒடுக்க களமிறக்கப்பட்ட ராணுவம்
பொலிவிய ஜனாதிபதி அவசரநிலையை அறிவித்ததுடன், நாட்டை முடக்கியுள்ள அரசுக்கு எதிரான சாலைத் தடைகளை அகற்றுவதற்காக ராணுவத்தினரையும் புல்டோசர்களையும் களமிறக்கியுள்ளார்.
நாடு முழுவதும் பேரணி
கன்சர்வேட்டிவ் அரசாங்கத்திற்கு எதிராக, ஆறு வாரங்களுக்கும் மேலாக தொழிற்சங்கங்கள், பூர்வகுடி குழுக்கள் மற்றும் கோகா பயிரிடும் விவசாயிகள் ஆகியோர் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பேரணிகளை நடத்தியும், கற்கள், மரக்கட்டைகள் மற்றும் குப்பைகளைக் கொண்டு சாலைகளை மறித்தும் போராடி வருகின்றனர்.
முக்கிய நகரங்கள் எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் கடும் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளன; பொருளாதாரம் பல பில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்துள்ளது;
அத்துடன், கடந்த இருபது ஆண்டுகளில் பொலிவியாவில் அமைந்த முதல் சோசலிச-சாராத அரசாங்கத்தையே கவிழ்க்கும் அச்சுறுத்தலை இந்தப் போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போராட்டக்காரர்கள் சட்டத்தின் முழு வலிமையையும் எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிப்பதற்காக, ஜனாதிபதி ரோட்ரிகோ பாஸ் சனிக்கிழமையன்று விடியற்காலை நேரத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
90 நாள் அவசரநிலையை அறிவித்ததுடன்; இது போராட்ட உரிமையைக் கட்டுப்படுத்துவதுடன், உள்நாட்டில் ராணுவத்தை நிலைநிறுத்தவும் அனுமதிக்கிறது.
ஜனாதிபதியின் உரை முடிந்த சில மணி நேரங்களில், எல் ஆல்டோ நகரில், சாலைத் தடைகளை அகற்றுவதற்காக புல்டோசர்கள் முன்னேறிச் சென்றதையும், ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய பொலிஸ் படைகள் அணிவகுத்துச் செல்வதைக் காண முடிந்தது.
பதவி விலக வேண்டும்
இந்த நிலையில், லா பாஸில், இராணுவக் காவல்துறையினரும் கடற்படையினரும் ஜனாதிபதி மாளிகைக்குப் பாதுகாப்பு அளித்தனர்; முக்கியச் சதுக்கங்களில் காவல்துறையின் அதிரடிப் பிரிவினர் நிலைநிறுத்தப்பட்டனர்.
ஜனாதிபதி பாஸ் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் குறைவான காலமே ஆகியுள்ள நிலையில், அவர் தாராளவாதப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கைவிட்டுப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
ஆனால், அவர் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்; அத்துடன், இச்சிக்கலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்களில் ஒன்றுடன் இந்த வாரத் தொடக்கத்தில் ஓர் ஒப்பந்தத்தையும் மேற்கொண்டார். இருப்பினும், சில பூர்வகுடி குழுக்கள் தொடர்ந்து போராட உறுதிபூண்டுள்ளன; மேலும் 40-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைத் தடைகள் இன்னும் நீடிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |