வெளிநாட்டில் தந்தை, சகோதரர் சடலம் அருகே சுருண்டு விழுந்து இறந்த பிரித்தானிய இளம்பெண்
பங்களாதேஷில் மர்மமான முறையில் மரணமடைந்த பிரித்தானிய குடும்பத்தின் மூன்றாவது நபரும் தற்போது மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் கார்டிஃப் பகுதியை சேர்ந்த 20 வயது சமிரா இஸ்லாம் என்பவரே தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவரது சகோதரர் மஹிகுல்(16), மற்றும் தந்தை ரஃபிகுல்(51) ஆகிய இருவரும், ஜூலை 26 அன்று பங்களாதேஷில் அவர்கள் வாடகைக்கு இருந்த ஒரு குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து அவசர உதவிக்குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து எஞ்சிய குடும்ப உறுப்பினர் அனைவரும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டனர். தாயார் ஹோஸ்னே அரா இஸ்லாம் மற்றும் இன்னிரு மகன் 21 வயதான சாதிக்குல் ஆகியோர் சுயநினைவற்ற நிலையிலேயே மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு,
சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். ஜூலை 12ம் திகதி பிரித்தானியாவில் இருந்து பங்களாதேஷ் திரும்பிய இந்த குடும்பம் 6 நாட்களுக்கு பின்னர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் சுயநினைவற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
@Media Wales
மேலும், கார்பன் மோனாக்சைடு காரணமாகவே குறித்த குடும்பம் பாதிக்கப்பட்டுவிட்டது என்ற கருத்தை அதிகாரிகள் நம்புகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முழு விசாரணைக்கு பின்னரே உண்மை பின்னணி தெரியவரும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குடும்பத்தினர்களை சந்திக்கும் பொருட்டு, இரண்டு மாத விடுமுறைக்கு இவர்கள் நாடு திரும்பியதாக கூறப்படுகிறது. மின்சாரம் தடைபட்டிருந்ததால், இரவு இவர்கள் குடியிருப்பில் பயன்பாட்டில் இருந்த பழுதடைந்த ஜெனரேட்டரில் இருந்து வெளியான புகையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய குடும்பம், ஒரே இரவில் சோகத்தில் மூழ்கிய சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.