மத்திய கிழக்கு முழுவதும் பிரித்தானிய இராணுவ தளங்கள் உஷார் நிலையில்... ஈரான் விடுத்த எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கையை அடுத்து, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பிரித்தானிய இராணுவத் தளங்கள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல்களுக்கு வாய்ப்பிருப்பதாக
அமெரிக்க குண்டுவீச்சுக்கு பதிலடி தரும் வகையில் மத்திய கிழக்கில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.
இதனிடையே, வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள பிரித்தானிய ஊழியர்களின் பாதுகாப்பு 'உயர் மட்டத்தில்' இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி நேற்று இரவு எச்சரித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த அமெரிக்க குண்டுவீச்சுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் உள்ள முக்கிய பித்தானிய முகாம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ட்ரோன் தாக்குதல்கள், ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுவீச்சுகளுக்கு வாய்ப்பிருப்பதாக கூறி இராணுவ வீரர்கள் தற்போது அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர். மட்டுமின்றி, ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களாலும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் எந்த தளங்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறவில்லை. இருப்பினும், மத்திய கிழக்கில் 14 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள RAF அக்ரோதிரி உள்ளிட்டவையும் அச்சுறுத்தல் பட்டியலில் இடம்பெறும் என்றே கூறப்படுகிறது.
கோபத்தை உணருவார்கள்
இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானிய தளங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய கிழக்கிற்கு மேலும் RAF டைபூன் போர் விமானங்களை அனுப்புவதாக அறிவித்தார்.
இதில் பஹ்ரைன் மற்றும் ஓமானில் உள்ள கடற்படை தலைமையகங்களும், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளங்களும் அடங்கும். தற்போது பதினான்கு போர் விமானங்கள் RAF அக்ரோதிரி விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
அவை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கக்கூடிய ஏவுகணைகளால் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று ஆயுதப்படை அமைச்சர் லூக் போலார்ட் இன்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் குண்டுவீச்சை அடுத்து ஈரான் தெரிவுசெய்யும் நேரத்தில் பதிலடி உறுதியென அந்த நாடு அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்க இராணுவ தளங்கள் தற்போது அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.
அமெரிக்க குண்டுவீச்சில் பிரித்தானியா கலந்துகொள்ளவில்லை என்பது மட்டுமின்றி, பிரித்தானியா மீது ஈரான் இதுவரை நேரிடையான அச்சுறுத்தலையும் விடுக்கவில்லை. ஆனால் ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலிலும் இணைபவர்கள் அதன் கோபத்தை உணருவார்கள் என்று எச்சரித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |