5ஆம் தலைமுறை போர் விமானத்தை 50% தள்ளுபடியில் பாகிஸ்தானுக்கு விற்கும் சீனா - இந்தியாவிற்கு ஆபத்தா?
பாகிஸ்தான் 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை, 50% தள்ளுபடியில் சீனாவிடமிருந்து வாங்குகிறது.
5 ஆம் தலைமுறை போர் விமானங்கள்
பாகிஸ்தான் தனது ஆயுதக் கையிருப்பில் 81 சதவீதத்தை, அதன் அண்டை நாடான சீனாவிடமிருந்து வாங்கி வருகிறது.
தற்போது, 30 J-35A ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை, சீனா 50 சதவீத தள்ளுபடி விலையில் பாகிஸ்தானுக்கு விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு சீனா இந்த போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு கையளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனாவிடமிருந்து பெறும் முதல் நாடாக பாகிஸ்தான் உள்ளது.
சீனா மக்கள் விமர்சனம்
சீனாவின் இந்த முடிவிற்கு, சமூக ஊடக தளங்களில் சீன குடிமக்களிடமிருந்து பரவலான விமர்சனங்களை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவிடமிருந்து வாங்கிய J-10 விமானங்களுக்கு இன்னும் முழு தொகையும் செலுத்தவில்லை. மேலும், IMF வழங்கும் நிதியை நம்பியே பாகிஸ்தான் செயல்படும் சூழல் உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஏன் இந்த விமானங்களை வழங்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், இந்த விமானங்கள் இன்னும் சோதனை அடிப்படையிலே உள்ளன. சீனா விமான படையில் கூட இன்னும் ஐந்தாம் தலைமுறை J-35A விமானங்கள் சேர்க்கப்படவில்லை.
இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதன் மூலம், களத்தில் இந்த போர் விமானங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பரிசோதிக்கவே, சீனா இந்த விமானங்களை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு ஆபத்தா?
சமீபத்தில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலில், இந்தியா சில விமானங்களை இழந்திருந்தாலும், இந்த மோதலில் இந்தியாவின் கையே ஓங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த மோதலில், சீனாவிடம் இருந்து வாங்கிய J10 விமானங்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும், அதன் அடிப்படையிலே இந்த J-35A விமானங்களை வாங்குவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், மூலோபாய ரீதியாக, பிராந்திய சமநிலையை பாகிஸ்தானுக்கு சாதகமாக மாற்ற சீனாவின் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இந்த போர் விமானங்கள், 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட PL-15 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
தற்போது வரை, இந்தியாவிடம் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இல்லை. Rafel போன்ற 4.5 ஆம் தலைமுறை போர் விமானங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறது.
மேலும், இந்தியா சொந்தமாக தனது ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. ஆனால், 2035 ஆம் ஆண்டிலே இந்த விமானங்களை தயாரித்து, இந்திய விமான படையில் சேர்க்கப்படும்.
இதனால், இந்தியா 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை கொள்முதல் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
மேலும், J-35A வை தாக்கியழிக்கும் வகையில், இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |