புலம்பெயர்தலுக்கு ஆதரவாக ஒரு நாடே ஒன்றிணையும் ஆச்சரியம்
புலம்பெயர்தலுக்கு ஆதரவாக ஒரு நாடே ஒன்றிணையும் ஆச்சரிய விடயம் ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்வோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகை பெருகக்கூடாது என்னும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேணை தொடர்பில், சரியாக இன்னும் ஒரு மாதத்தில், அதாவது, ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
எப்படி சுவிஸ் மக்களில் ஒரு தரப்பினரிடையே அந்த பிரேரணைக்கு ஆதரவு உள்ளதோ, அதே அளவுக்கு அதற்கு எதிர்ப்பும் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் பல்வேறு தரப்பினர் அந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில், சுவிஸ் மாகாணங்கள், நகரங்கள் மற்றும் முனிசிபாலிட்டிகள் அந்த பிரேரணைக்கு எதிராக கைகோர்த்துள்ளன.
நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவற்றின் பிரதிநிதிகள், அந்த பிரேரணை, ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக, புதிய பிரச்சினைகளை உருவாக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளார்கள்.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதால், சுகாதாரம், சுற்றுலா மற்றும் கல்வி முதலான முக்கியமான துறைகளில் மோசமான பணியாளர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், ஓய்வூதியத் திட்டம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சமீபத்தில், சுவிஸ் உள்துறை அமைச்சரான எலிசபெத் (Elisabeth Baume-Schneider), வெளிநாட்டுப் பணியாளர்கள் சுவிஸ் நிதி அமைப்புக்கு வலு சேர்ப்பதாகவும், சுவிட்சர்லாந்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கு அவர்கள் பெரும் பங்களிப்பதாகவும் தெரிவித்தது நினைவிருக்கலாம்.
புலம்பெயர்ந்தோர், தாங்கள் பெற்றுக்கொள்வதைவிட சுவிட்சர்லாந்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கு கூடுதலாக பங்களிப்புச் செய்வதாகவும், அவர்களால் ஓய்வூதிய திட்டத்துக்கு உபரி நிதி கிடைப்பதாகவும் எலிசபெத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |