இரவு விடுதியில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்... கொத்தாக பலியான பலர்
துருக்கியின் மத்திய இஸ்தான்புல் நகரில் பகல்நேர சீரமைப்பு வேலையின் போது இரவு விடுதி ஒன்று தீ விபத்தில் சிக்கியதில் பலர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Masquerade இரவு விடுதி
முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், குறைந்தது 29 பேர்கள் மரணமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மத்திய இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள Masquerade இரவு விடுதியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவயிடத்தில் குவிக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து அவசர மருத்துவ உதவிக் குழுவினர் விடுதிக்குள் நுழைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக தொடர்புடைய இரவு விடுதியானது சீரமைப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தீ விபத்துக்கு காரணமானவர்கள் என குறிப்பிட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேர்கள் கைதாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 4,000 பேர்கள்
இதனிடையே வெளியான காணொளி காட்சிகளில், தரைத்தளங்களில் இருந்து வெள்ளை மற்றும் கறுப்பு புகை வெளியேறுவதையும், கட்டிடத்தின் மூன்றாவது தளத்திற்கு தீப்பிழம்புகள் எழுவதையும் காண முடிகிறது.
மேலும் இரவு விடுதியின் முகப்பு வாசல் மொத்தமாக எரிந்து சேதமடைந்துள்ளது. ஒரே நேரத்தில் 4,000 பேர்கள் வரையில் அமரக் கூடிய மிகப்பெரிய இரவு விடுதி இது. வாரத்தில் பலமுறை இசை நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
16 மாடிகள் கொண்ட குடியிருப்பு வளாகத்தின் தரைத்தளத்திலேயே இரவு விடுதி அமைந்துள்ளது. மேலும், 8 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டதை அடுத்து 7 பேர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |