இது தான் கேப்டன் மைண்ட்! மும்பையை வீழ்த்த டோனி வகுத்த வியூகம்: புகழ்ந்து தள்ளிய சேவாக்
மும்பை அணிக்கெதிரான போட்டியில் டோனியின் கேப்டன்சிப்பை முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஐபிஎல் தொடரின், நேற்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை அணியும் மோதின, இப்போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 157 ஓட்டங்களை எட்ட முடியாமல் மும்பை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றி மூலம், சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கூறுகையில், இப்போட்டியில் டோனியின் கேப்டன்சிப் மிகவும் ஷார்ப்பாக இருந்தது என்று கூறலாம்.
ஏனெனில், போட்டிக்கு முன் அவர் எந்த ஒரு திட்டத்தை வைத்துக் கொள்ளவில்லை. களத்தில் இருக்கும் நிலையை வைத்தும், எதிரணி பேட்ஸ்மேன்களின் வருகையை வைத்தும் பந்து வீச்சு தாக்குதலைப் பயன்படுத்தினார்.
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான இஷான் கிஷானை வீழ்த்திய விதத்தை சொல்லலாம். இஷான் கிஷானுக்கு டேவைன் பிராவோ பந்து வீச வந்தவுடன், இன்சைடில் நான்கு பீல்டர்களை நிறுத்தி, அற்புதமாக வீழ்த்தினார்.
மைதானத்தின் நிலையை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் பந்து வீச்சாளர்களை அழைத்து பந்து வீச வைத்தார். இந்த லீக்கில் எந்த கேப்டனுக்கு ஒரு கூர்மையான மூளை என்றால், நான் டோனியைத் தான் சொல்லுவேன், அவர் அந்தளவிற்கு தன்னுடைய வீரர்களை சிறப்பாக செயல்படுத்தினார்.
முக்கியமாக இந்த ஐபிஎல் போட்டியின் முதல் பாதியில் சென்னை அணியுடனான ஆட்டத்தில், சென்னை அணி நிர்ணயித்த 219 ஓட்டங்களை தனி ஒருவனாக அடித்து பொல்லார்ட் வெற்றியைத் தேடித்தந்தார்.
அந்த போட்டியில் அவர் 88 ஓட்டங்கள் அடித்தார். அது போன்ற தவறு இந்த போட்டியில் நடந்துவிடக் கூடாது என்பதற்காக உடனே வேகப்பந்து வீச்சாளரான ஹசல்வுட்டை வர வைத்து பொல்லார்ட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். இது டோனியின் நல்ல ஒரு திட்டம் என்று சேவாக் புகழ்ந்து தள்ளினார்.