இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ள எபோலா பாதிப்பு எண்ணிக்கை
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா பாதிப்பு எண்ணிக்கை இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை
உலக சுகாதார அமைப்பின் தலைவர், எபோலா நோய்ப் பரவலின் மையப்பகுதியைப் பார்வையிட்டு, இந்நோய்க்கு எதிரான போராட்டத்தில் தலைமை ஏற்குமாறு உள்ளூர் சமூகங்களை வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 121 என்ற எண்ணிக்கையை விட, வெள்ளிக்கிழமையன்று காங்கோ ஜனநாயகக் குடியரசில் உறுதிசெய்யப்பட்ட எபோலா நோயாளிகளின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளதாக காங்கோ அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நோய்ப் பரவலுக்கு, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லாத நிலையில், இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலக சுகாதார அமைப்பு இந்த நோய்ப் பரவலை, அதன் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையான உலகளாவிய சுகாதார அவசரநிலை என அறிவித்துள்ளது. மேலும், எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற மருத்துவ தன்னார்வ அமைப்பு, இதுவரையில் பதிவு செய்யப்பட்ட எபோலா நோய்ப் பரவல்களிலேயே இது மிக வேகமாகப் பரவும் ஒன்று என அடையாளப்படுத்தியுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டும் 1,028 பேர்களுக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 220-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை மரணமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த நோய் அண்டை நாடான உகாண்டாவிற்கும் பரவியுள்ளது, அங்கு ஒன்பது பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் நோய் பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.

மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ பகுதியில் 1976-ஆம் ஆண்டு எபோலா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது; இது காங்கோ ஜனநாயகக் குடியரசில் 17-வது முறையாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இருப்பினும், இதுவரை முறையான சிகிச்சை அல்லது தடுப்பூசிகள் என எதுவும் உலக சுகாதார மன்றத்தால் அளிக்கப்படவில்லை. 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவல், 28,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியதாகும்.
தடுப்பூசி உருவாக்குவதற்காக
இந்த நிலையில், தற்போதைய நோய் பரவலில், இறப்பு விகிதம் 30 முதல் 50 சதவீதம் வரை எட்டக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் இட்டூரி பகுதிக்கு மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது, மேலும் அமெரிக்கா 112 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இருப்பினும், சுகாதார நடவடிக்கைகளுக்கான உலகளாவிய நிதி ஒதுக்கீடு 498 மில்லியன் டொலரிலிருந்து 219 மில்லியன் டொலராக, பாதியளவுக்கும் மேலாகக் குறைந்துள்ளதாக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

இதனிடையே, இந்த வாரம், எபோலா நோய்ப்பரவலில் இருந்து முதல் நபர் குணமடைந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், உலக சுகாதார அமைப்பு, சோதனை மருந்துகள் மற்றும் ஒரு சாத்தியமான தடுப்பூசியை உருவாக்குவதற்காக காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய இரு நாடுகளுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எபோலா நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்காக கென்யாவில் தனிமைப்படுத்தல் மையம் ஒன்றை திறப்பதற்கான அமெரிக்கத் திட்டத்தை, கடிபா நிறுவனம் என்ற மனித உரிமை அமைப்பு எதிர்த்ததை அடுத்து, கென்ய நீதிமன்றம் இந்த வாரம் இடைநிறுத்தம் செய்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |