ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
UAE பயணிகள் ரயில் சேவை
மத்திய கிழக்கில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் அதன் முதல் தேசிய பயணிகள் ரயில் சேவையை நேற்று எதிஹாட் ரயில் (Etihad Rail) அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், ஏற்கனவே 10,000க்கும் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்தனர்.
முதல் பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:34 மணிக்கு ஃபுஜைராவிலிருந்து புறப்பட்டு, காலை 7:19 மணிக்கு அபுதாபியின் முகமது பின் சையத் சிட்டி நிலையத்தை அடைந்தது.
முதல் நாளில் ஃபுஜைரா மற்றும் அபுதாபி இடையே 6 பயணிகள் ரயில் சேவைகளை எதிஹாட் ரயில் நிறுவனம் வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
சௌகரிய வகுப்பிற்கு 55 தினார் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,400), பிரீமியம் வகுப்பிற்கு 120 தினார் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 3100) கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஃபுஜைராவிலிருந்து அபுதாபிக்கு காலை 5:34 - காலை 7:19, காலை 10:59 - மதியம் 12:44, மாலை 5:28 - இரவு 7:13 அபுதாபியிலிருந்து ஃபுஜைரா வரை காலை 8:19 - காலை 10:04, பிற்பகல் 1:53 - பிற்பகல் 3:38, மாலை 6:39 - இரவு 8:24 என இந்த சேவை தற்போது ஒவ்வொரு திசையிலும் தினமும் 3 முறை இயக்கப்படுகிறது.

இந்த வெற்றிகரமான அறிமுகம், எதிர்காலத்தில் ஏழு அமீரகங்களையும் இணைக்கும் வகையிலான ஒரு ஒருங்கிணைந்த தேசிய போக்குவரத்து வலையமைப்பை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
துபாய் மற்றும் அல் தைத் நிலையங்கள் செப்டம்பர் 30 அன்று செயல்படத் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே வேளையில் ஷார்ஜா நிலையம் மார்ச் 30, 2027 அன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் தங்கள் வீட்டின் வாசலிலிருந்து சேருமிடம் வரை பயணத்தைத் திட்டமிட, எதிஹாட் ரயில் செயலி மற்றும் இணையதளத்தில் உள்ள ‘Journey Planner’ (பயணத் திட்டமிடல் வசதி) அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் ரயில் சேவைகள் பேருந்துகள், டாக்சிகள் மற்றும் பிற போக்குவரத்து வசதிகளுடன் இணைக்கப்படுகின்றன.

அகலமான சொகுசு இருக்கைகள், இலவச WiFi வசதி, ஒவ்வொரு இருக்கையிலும் தனித்தனி மின்சார இணைப்பு (power outlet), லக்கேஜ் வைப்பதற்கான இடம் என சொகுசு பயணமாக உள்ளதாக பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முதல் பயணி
“நம்மனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பயணி” (The Passenger Who Represents Us All) என்ற தலைப்பில் எதிஹாட் ரயில் நிறுவனம் நடத்திய நாடு தழுவிய பிரச்சாரத்தின் மூலம் இதில் பயணிக்க உள்ள முதல் பயணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஃபுஜைராவைச் சேர்ந்த எமிராட்டி சுகாதார நிபுணரும், தன்னார்வலரும், மாற்றுத்திறனாளியும் ஆன ஹமத் மன்சூர் அல்புலோஷி (Hamad Mansour Albloushi) முதல் பெட்டியின் முதல் இருக்கையில் அமர்ந்து முதல் பயணி என்ற பெருமையை பெற்றார்.
Some seats carry more than a number… they carry a story.
— Etihad Rail (@Etihad_Rail) June 30, 2026
Today, Hamad Mansour Albloushi became the first passenger aboard the UAE's first national passenger rail service.
He was chosen through The Passenger Who Represents Us All campaign, for his outstanding contribution to… pic.twitter.com/5tHXJ3dOLV
எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் (Emirates Red Crescent) மற்றும் ஜூசூர் அல்-கைர் (Jusoor Al-Khair) போன்ற அமைப்புகள் மூலம் அவர் ஆற்றிய பல ஆண்டுகால சமூக சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவரைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |