உலகக் கிண்ணத்திற்கான முதலீட்டுத் திட்டம்... இறுதியில் ஃபிஃபா எடுத்துள்ள முடிவு
பரவலான கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் பங்குகளை விற்பனை செய்வதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக ஃபிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
முன்னெடுத்துச் செல்லப்படாது
இந்தத் திட்டம், அதன் அசல் நோக்கத்திற்கு இனி உதவாத பிளவுகளை உருவாக்கியுள்ளது என்பது தெளிவாகிவிட்டது என்றும் இன்ஃபான்டினோ கூறியுள்ளார். இதன் விளைவாக, இந்த முன்மொழிவு முன்னெடுத்துச் செல்லப்படாது என்றும் ஃபிஃபா அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஆண்கள் மற்றும் மகளிர் உலகக் கிண்ணம் தொடர் உள்ளிட்ட போட்டிகளில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும் முன்மொழிவுக்கு ஆதரவளித்தால், 211 உறுப்புச் சங்கங்கள் ஒவ்வொன்றிற்கும் 40 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக இன்ஃபான்டினோ முன்மொழிந்திருந்தார்.
இந்த நிலையில், ஐரோப்பிய கால்பந்து அமைப்பான யூஈஎஃப்ஏ (UEFA)-வின் 55 உறுப்புச் சங்கங்கள், அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிப்பது குறித்து வியாழக்கிழமையன்று வாக்களித்தன.
இதனிடையே, அந்தத் திட்டம் குறித்து நிர்வாக அமைப்பையே ஏமாற்றப்பட்டுள்ளதாக ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி கெவின் லாமூர் தெரிவித்தார்.
மட்டுமின்றி, வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் கால்பந்தை நிர்வகித்து, சமீபத்திய உலகக் கிண்ணம் தொடரை நடத்திய கான்சாகாஃப் (Concacaf), அதன் உறுப்பினர்கள் இன்ஃபான்டினோவின் திட்டத்தை நிராகரித்ததாகக் கூறியது.
எதிராக 136 நாடுகள்
ஆசிய கால்பந்து கூட்டமைப்பான AFCயும் UEFA மற்றும் Concacaf-ன் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்தது. இந்த நிலையில், மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஃபிஃபா (FIFA) மாநாட்டில் நான்காவது முறையாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட முயன்று வரும் 56 வயதான இன்ஃபான்டினோ, தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
இன்ஃபான்டினோவின் முதலீட்டுத் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்திருந்தாலும், ஃபிஃபாவின் உறுப்புச் சங்கங்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்குத் தேவை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்; அதாவது, அதன் 211 உறுப்பினர்களில் 106 பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டியிருந்தது.

AFCயும் கைவிட்டதால் தமது திட்டம் நிறைவேறாது என்பதை அவர் உணர்ந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. UEFA-விடம் 55 வாக்குகளும், CONCACAF-இடம் 35 வாக்குகளும், AFC-இடம் 46 வாக்குகளும் உள்ளன.
அனைத்து உறுப்புச் சங்கங்களும் தங்கள் நிர்வாக அமைப்பின் நிலைப்பாட்டை ஆதரித்திருந்தால், இன்ஃபான்டினோவின் திட்டத்திற்கு எதிராக 136 நாடுகள் வாக்களித்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |