கனமழையால் பெருவெள்ளம்... நிலச்சரிவில் உயிருடன் புதைந்த மக்கள்: வெளிவரும் பகீர் சம்பவம்
இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் உயிருடன் புதைந்து பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பேரிடர் நிவாரண அமைப்பு இது தொடர்பில் ஞாயிறன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகினர். மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சிக்கினர்.
இந்த நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சரிந்தன. மீட்புப் படையினர் 41 சடலங்களையும், காயமடைந்த 5 பேரையும் மீட்டதாக உள்ளூர் பேரிடர் அமைப்பின் தலைவர் லென்னி ஓலா தெரிவித்துள்ளார்.
மேலும் ஓயாங் பயாங் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 40 வீடுகள் மொத்தமாக சேதமடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் இருந்து மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறிவிட்டனர். அவர்களில் சிலர் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழை அடிக்கடி நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. இதில் டசின் கணக்கானவர்கள் பலியாகும் நிலையும் ஏற்படுகிறது.
17,000 தீவுகளின் தொகுப்பான இந்தோனேசியாவில் மில்லியன் கணக்கான மக்கள் மலைப்பகுதிகளில் அல்லது வளமான நீரால் சூழ்ந்த சமவெளிகளுக்கு அருகில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.