5 பிள்ளைகள் இருந்தும் மொத்த சொத்துக்களையும் தானம் செய்ய விரும்பும் பில்லியனர்
பிரெஞ்சு பில்லியனர் ஒருவர், தனக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தும் தனது மொத்த சொத்துக்களையும் தானம் செய்யும் விரும்புகிறார்.
பிரான்சின் பிரபல தொழிலதிபர் மற்றும் பில்லியனர் பியர்-எட்வர்ட் ஸ்டெரின் (Pierre Edouard Sterin), தனது 1.4 பில்லியன் யூரோ மதிப்புள்ள சொத்துக்களை தனது ஐந்து குழந்தைகளுக்கு வழங்காமல், முழுமையாக தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க விரும்புகிறார்.
இதற்காக அவர் பிரெஞ்சு சட்டமியற்றுபவர்களை, வாரிசு சட்டங்களை (Inheritance Law) தளர்த்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய பிரெஞ்சு சட்டப்படிம் ஒரு நபரின் சொத்து பெரும்பகுதி அவர்களின் குழந்தைகளுக்கு செல்ல வேண்டும்.
ஸ்டெரின், " எனது சொத்துக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நான் தீர்மானிக்க சுதந்திரம் வேண்டும். முழு செல்வத்தையும் தொண்டு காரணங்களுக்காக வழங்க விரும்புகிறேன்" என்று செனட் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்பாக்ஸ் நிருவனத்தின் நிறுவனர் மற்றும் Otium Capital முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்டெரின், பிரான்சின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும், அரசியல் மற்றும் தொண்டு வட்டாரங்களில் செல்வாக்கு பெற்றவராகவும் உள்ளார்.
அவர் 2012 முதல் பெல்ஜியத்தில் வசித்து வருகிறார். பிரான்சின் வரி அமைப்பையும் அரசியல் ஸ்தாபனத்தையும் அடிக்கடி விமர்சித்து வருகிறார்.
இந்த அறிவிப்பு, பிரான்சின் வாரிசு உரிமைகள், குடும்ப பொறுப்புகள் மற்றும் தொண்டு நன்கொடைகள் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
சட்டம் மாற்றப்பட்டால், பிரான்சின் பரம்பரை விதிகளில் மிகப்பெரிய மாற்றமாக அமையும். ஸ்டெரின், பொருளாதார ரீதியில் தாராளவாதமும், சமூக ரீதியில் பழமைவாதமும் கொண்ட கொள்கைகளை ஆதரிப்பவர்.
அவர், "பிரான்ஸை அரசியல் ரீதியாக வலதுசாரி நோக்கில் மாற்ற உதவுவேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |