இந்தியா முதல் பிரேசில் வரை... காஸா போரில் இஸ்ரேலுக்கு உதவிய 51 நாடுகள்
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச நீதிமன்றம் தொடர்ச்சியாக எச்சரித்தும், குறைந்தது 51 நாடுகளில் இருந்து ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
5 நாடுகள்
2022 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட இஸ்ரேலிய வரி ஆணையத்தின் (ITA) இறக்குமதி தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்துள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நாடுகளும் இனப்படுகொலைக்கு எதிரான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. சில சமயங்களில், இராணுவம் தொடர்பான பொருட்கள், இஸ்ரேல் மீது முறையாக ஆயுதத் தடை விதித்திருந்த அல்லது அந்நாட்டிற்கான ஆயுத விநியோகத்தை பகுதியளவு நிறுத்தி வைத்திருந்த நாடுகளில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
போர்க்காலத்தில் அதிகரித்த அளவிலான இராணுவத் தளவாட ஏற்றுமதிகளைப் பதிவு செய்துள்ள நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, ருமேனியா, தைவான் மற்றும் செக் குடியரசு ஆகியவை முன் வரிசையில் உள்ளன.
பல நாடுகள் உண்மையானத் தரவுகளை வெளியிட மறுத்துள்ள நிலையிலும், அம்மோனியம், வெடிபொருட்கள், ஆயுதப் பாகங்கள் மற்றும் கவச வாகன உதிரிபாகங்கள் தொடர்பானவை என வகைப்படுத்தப்பட்ட இறக்குமதிகள் உட்பட, இராணுவம் சார்ந்த பொருட்களின் 2,603 சரக்குகள், அக்டோபர் 2023 மற்றும் அக்டோபர் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் இஸ்ரேலுக்குள் நுழைந்ததாக ITA தரவுகள் காட்டுகின்றன.
மொத்தத்தில், ஆயுத இறக்குமதிகளின் மதிப்பு 885.6 மில்லியன் டொலராகும், இதில் 91 சதவீதம் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, அக்டோபர் 2023-க்கு முந்தைய 20 மாதங்களில், இஸ்ரேலுக்கான இராணுவம் சார்ந்த இறக்குமதிகள் மொத்தம் 1.41 பில்லியன் ஷெக்கல்களாக (388.1 மில்லியன் டொலர்) இருந்தன.
காஸாவில் தனது இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு உதவும் வகையில், இஸ்ரேல் வெளிநாட்டு ஆயுத விநியோகத்தைச் சார்ந்திருப்பதை அதிகரித்துள்ளதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஐரோப்பிய நாடுகள்
2025 அக்டோபர் 10 அன்று சமீபத்திய போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகும், ஆயுதங்களின் வரத்து நிற்கவில்லை. 2025-ஆம் ஆண்டின் இறுதி இரண்டு மாதங்களில், இஸ்ரேல் இராணுவம் 89.4 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டது.
போரின் போது இஸ்ரேலுக்குத் தேவையான இராணுவ இறக்குமதிகளை வழங்கும் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா இருந்தது. இந்த விசாரணையில் கண்டறியப்பட்ட மொத்த அறிவிக்கப்பட்ட மதிப்பில் 42 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.
இந்தியா சுமார் 26 சதவீதப் பங்களிப்புடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பதிவுசெய்யப்பட்ட மொத்த ஆயுத இறக்குமதி மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பங்களிப்பை இந்த இரு நாடுகளே கொண்டிருந்தன.

அடுத்த மூன்று பெரிய ஏற்றுமதியாளர்கள் ருமேனியா (8 சதவீதம்), தைவான் (4 சதவீதம்) மற்றும் செக் குடியரசு (3 சதவீதம்) ஆவர். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் கூட்டாக, இஸ்ரேலின் ஆயுதங்கள் தொடர்பான இறக்குமதிகளின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 19 சதவீதத்தைக் கொண்டிருந்தன.
மேலும் ஏறக்குறைய 8 சதவீதம், தைவான், சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |