அவசர அவசரமாக ஜேர்மனிக்கு கொண்டுவரப்படும் அகதிகள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்தவர்கள் முதலான ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துவருவதாக ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.
ஆனால், ஜேர்மனி கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக ஒரு வாரம் முன்பு வெளியான தகவல் ஏமாற்றத்தையளிப்பதாக அமைந்தது.
பாகிஸ்தானுக்கு தப்பியோடிய ஆப்கன் மக்கள்
2021ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்தவர்கள் முதலான ஆப்கன் நாட்டவர்கள் சுமார் 2,000 பேரை ஜேர்மனிக்கு அழைத்துவருவதாக ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.

அதை நம்பி ஏராளமானோர் பாகிஸ்தானுக்கு தப்பியோடினர். ஜேர்மன் விசா கிடைக்கும் என இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காத்திருக்க, ஜேர்மனியில் புலம்பெயர்தல் அரசியலாகிவிட்ட நிலையில், அந்த ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ள ஜேர்மன் அரசு தயக்கம் காட்டிவந்தது.
கடந்த வாரம், இந்த விடயம் குறித்து பேசிய ஜேர்மன் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளரான Sonja Kock, ஜேர்மனிக்கு வருவதற்காக பாகிஸ்தானில் காத்திருக்கும் 640 ஆப்கன் நாட்டவர்கள் இனி ஜேர்மனிக்கு வர முடியாது என்று கூறியதால் அந்த அகதிகள் கடும் ஏமாற்றம் அடைந்தார்கள்.
அவசர அவசரமாக ஜேர்மனிக்கு கொண்டுவரப்படும் அகதிகள்
இந்நிலையில், தற்போது அவசர அவசரமாக அந்த அகதிகளை அழைத்துக்கொள்ள ஏற்பாடு செய்துவருகிறது ஜேர்மனி.
ஆம், சுமார் 535 ஆப்கன் அகதிகளை விரைவாக ஜேர்மனிக்கு அழைத்துவர ஜேர்மன் அரசு முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, செவ்வாயன்று 160 ஆப்கன் அகதிகள் விமானம் மூலம் ஜேர்மனிக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டுவிட்டனர்.
முடிந்தவரை ஆப்கன் அகதிகளை விரைவாக ஜேர்மனிக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர், இந்த விடயத்தை இந்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், சிலரை மட்டும் புத்தாண்டில் அழைத்துக்கொள்ள நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் திடீர் மன மாற்றத்துக்கான காரணம் தெரியவில்லை! பாகிஸ்தானிலிருக்கும் ஆப்கன் அகதிகளை இந்த ஆண்டுக்குள் ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ளவேண்டும் என்றும், இல்லையென்றால், அவர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே நாடுகடத்தப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |