அவர் எங்கள் கடவுள்...இளவரசர் பிலிப் மரணத்துக்காக ஒப்பாரி வைத்து அழும் பெண்கள்: இல்லை இல்லை பிரித்தானியாவில் இல்லை!
அவர் எங்கள் கடவுள், அவர் எங்களில் ஒருவர் என ஆண்கள் கலங்கிய கண்களுடன் கூற, பெண்களோ ஒப்பாரி வைத்து அழுகிறார்கள்...
இளவரசர் பிலிப் மரணத்துக்காக வாரக்கணக்கில் துக்கம் அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஏராளமான விலங்குகளும் பலிகொடுக்கப்படுகின்றன.
இதெல்லாம் பிரித்தானியாவில் இல்லை, பிரித்தானியாவுக்கும் ராஜ குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்லாத தென் பசிபிக் தீவு ஒன்றில்தான் இதெல்லாம் நடக்கிறது.
400 பேர் வாழும் Yaohnanen என்ற ஆதிவாசிக் கிராமம் Tanna என்ற தீவில் அமைந்துள்ளது.
அந்த கிராமத்துக்கும் இளவரசர் பிலிப்புக்கும் இருக்கும் ஒரு விசேஷ உறவு, மற்ற எந்த ராஜ குடும்பத்தினருக்கும் இதுவரை கொடுத்துவைக்கவில்லை எனலாம்.
1970களில் ஒரு முறை Yaohnanen கிராமத்துக்கு வந்த இளவரசர் பிலிப்புக்கு தாங்கள் போரில் பயன்படுத்தும் ஆயுதம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்கள் அக்கிராமத்தார்.
அவர்கள் வழங்கிய அந்த ஆயுதத்துடன் ஒரு புகைப்படம், மற்றும் தான் கையெழுத்திட்ட ஒரு புகைப்படம் என இரண்டு புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் பிலிப்.
அவற்றை பொக்கிஷம் போல வைத்து பாதுகாத்துவருகிறார்கள் அக்கிராமத்தார். தங்களைக் காண இளவரசர் பிலிப் மீண்டும் வருவார் என காத்திருந்த நிலையில், அவர் இறந்துபோனார் என்ற செய்தி கேட்டு கலங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறார்கள் அக்கிராம மக்கள்.
கிராமத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களில் ஒருவரான Joe Ketu, அவர் வரமாட்டார் என்பதை அறிந்து நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம், ஆனால், அவர் எங்களுக்கு சில வாக்குறுதிகள் அளித்துச் சென்றிருந்தார், அவர் கூறியது போலவே, சாலைகள் அமைப்பது முதல் மருத்துவ வசதிகள் வரை அவர் வாக்களித்த பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைக் காண்கிறோம் என்கிறார்.
எங்கள் முன்னாள் தலைவரான Jack Naivaவுக்கு இளவரசர் கடிதங்கள் எல்லாம் அனுப்பியுள்ளார்.
அவர் இறந்துபோனார், அதனால் இப்போது மேல் உலகத்தில் அவரும் இளவரசரும் சந்தித்துப் பேசிக்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்கிறார் Ketu.
இளவரசர் பிலிப் நினைவாக, அவரை கௌரவிக்கும் வகையில் கிராமத்தில் பெரிய விருந்து ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஏராளம் விலங்குகளும் பலிகொடுக்கப்பட்டு வருகின்றன. பிரித்தானிய இளவரசர் ஒருவர் இறந்ததற்காக அவரை அறிந்த உலகத்தலைவர்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்துவது இயற்கைதான்.
ஆனால், பிரித்தானியாவுடன் சம்பந்தமே இல்லாத ஒரு நாட்டு மக்கள், அவரை தங்கள் கடவுளாக, தங்களில் ஒருவராக எண்ணி, பல வாரங்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள் என்பதையெல்லாம் கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!