இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம்: அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்த ஹிஸ்புல்லா: ஏன்?
போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் முன்மொழிவை லெபனானின் ஹிஸ்புல்லா நிராகரித்துள்ளது.
கேள்விக்குறியான போர் நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் - லெபனான் இடையிலான தாக்குதல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்த உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பேச்சுவார்த்தையில் ஹிஸ்புல்லா பங்கேற்கவில்லை என தெரிவித்ததோடு, அமெரிக்கா முன்மொழிந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் முழுமையாக வெளியேறுவது மட்டுமே அமைதி ஒப்பந்தத்தின் முதல் நிபந்தனை என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் இது தொடர்பான விவரங்களை லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவரிடம் முறையாக தெரிவித்து விட்டதாகவும் ஹிஸ்புல்லா தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் நிபந்தனைகள்
போர் நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்புவது உறுதி செய்யப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுகட்டமைப்பு உதவிகளை உடனடியாக செய்தல், லெபனான் நாட்டு கைதிகளை உடனடியாக இஸ்ரேலில் இருந்து விடுவித்தல் ஆகியவை ஹிஸ்புல்லா அமைப்பினரின் முக்கிய நிபந்தனையாக உள்ளது.
அமெரிக்கா முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்தில், இஸ்ரேல் மீதான ஹிஸ்புல்லாவின் தாக்குதல் நிறுத்தம் குறித்து மட்டும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |