சவுதி விவகாரத்தில் தலையிட்டால்... துருக்கி மற்றும் பாகிஸ்தானுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை
Houthis warn Pakistan, Turkiye over Saudi intervention: சவுதியில் தலையீடு குறித்து பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சவுதி அரேபியாவுடன் இணைந்து இராணுவ ரீதியாகத் தலையிட வேண்டாம் என பாகிஸ்தானையும் துருக்கியையும் யேமனின் ஹவுதிகள் எச்சரித்துள்ளதுடன், இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒன்று மோதலில் படைகளை ஈடுபடுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இரும்புக்கரம் கொண்டு
பாகிஸ்தான் ஊடகச் செய்திகளின்படி, அன்சார் அல்லாவின் அரசியல் குழு உறுப்பினரும் தமார் (Dhamar) ஆளுநருமான முகமது அல்-புகைதி, ஈராக் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'அனதர் ரீடிங்' (Another Reading)-க்கு அளித்த பேட்டியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக, துருக்கியும் பாகிஸ்தானும் இதில் தலையிட்டால், நாங்கள் அவர்களை இரும்புக்கரம் கொண்டு தாக்குவோம் என்று அல்-புகைத்தி கூறியுள்ளார்.
மேலும், யேமனுக்கு எதிரான சவுதியின் ஆக்கிரமிப்பு என்று அவர் விவரித்ததில் அந்த இரு நாடுகளும் இணைந்தால், ஹவுதிகள் அவற்றுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே மீண்டும் தொடங்கியுள்ள சண்டைகள், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு இடையேயான மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மீது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் ராணுவ ரீதியாக ஈடுபடத் தீர்மானித்தால், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களை நோக்கியே ஹவுதி அமைப்பின் நிலைப்பாடு அமைந்திருக்கும் என்று அல்-புகைதி கூறினார்.
மேலும், இவ்விரு நாடுகளிலும் ஏமன் மீதான பொதுமக்களின் அனுதாபத்தைக் குறிப்பிட்ட அவர், சண்டையிலிருந்து விலகி இருக்குமாறு இஸ்லாமாபாத் மற்றும் அங்காரா ஆகியவற்றை வலியுறுத்தினார்.
சவுதி அரேபியா ஹவுதிகளின் புதிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள சூழலிலும், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ள பிற உறுப்பு நாடுகளும் இதில் நேரடியாக ஈடுபடக்கூடுமோ என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சவுதி அரேபியாவிற்கு இராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க துருக்கி முன்வரக்கூடும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஹக்கன் ஃபிடான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்ப உதவி
மக்கா கூட்டணியாக, நாங்கள் இது குறித்து பாகிஸ்தானிடம் பேசுவோம்; அத்துடன் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் வழங்க முடியும் என்றும் ஃபிடான் கூறியுள்ளார்.

சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டித்துள்ளதுடன், ரியாத் மீதான தனது ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மக்காவுக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டது; மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இக்குறித்த விவகாரம் எழுப்பப்பட்டது.