ஜூன் முதல் கிரிக்கெட்டில் புதிய விதிகளை அமுல்படுத்தும் ஐசிசி
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிகளை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
2 பந்து விதி
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 2 பந்துகளை பயன்படுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர், பந்துகள் புதியதாகவே இருந்ததால் அதனை ஸ்விங் செய்ய பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருந்தது.
இதன் காரணமாக துடுப்பாட்ட காரர்கள் அதிகளவிலான ஓட்டங்களை குவிக்க முடிந்தது. ஒரு நாள் போட்டி, T20 போட்டிகளை போல் மாறியது.
இந்நிலையில், ஒரு நாள் போட்டியில், இந்த விதியை மாற்றுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இதன்படி, இனி முதல் 35 ஓவர்களுக்கு மட்டுமே 2 பந்துகளும் பயன்படுத்தப்படும். அதன் பின்னர் இரு பந்துகளில் ஏதேனும் ஒன்றை பந்துவீசும் அணி தேர்வு செய்ய வேண்டும்.
இதன் மூலம், பந்து வீச்சாளர்கள் பந்தை நன்றாக ஸ்விங் செய்து, எதிரணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியும்.
மாற்று வீரர்
இதே போல், போட்டியின் போது வீரர்கள் காயம்பட்டால், மாற்று வீரர்களை தேர்வு செய்யும் விதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போட்டி தொடங்கும் முன்னர், இரு அணிகளும் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு துடுப்பாட்டகாரர், ஒரு ஸ்பின்னர், ஒரு ஆல்ரவுண்டர், ஒரு சீம் பவுலர் ஆகியோரின் பெயர்களை நடுவரிடம் வழங்க வேண்டும்.
வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இந்த வீரர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அதிலும், மற்றொரு வீரர் காயமடைந்தால், நடுவர் ஒரு வீரரை தேர்வு செய்வார்.
மேலும், DRS முறை, எல்லைக் கோடு கேட்சுகள் குறித்த விதிகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகள் தொடர்பான விதிகள் ஜூன் மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும், ஒருநாள் போட்டிகள் தொடர்பான விதிகள் ஜூலை முதலில் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |