மியான்மரில் அதிகரிக்கும் ராணுவ ஒடுக்குமுறை: போராடும் பொதுமக்கள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மர் நகரமான மாண்டலேயில் கப்பல் கட்டும் தளத்தில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து இன்று ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை பணிக்கு திரும்பும்படி அதிகாரிகள் கூறினர். ஆனால், தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடும் நடத்தினர்.
இதில் 2 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு ராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையை கையாண்டு வந்தாலும் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


