இஸ்ரேல்-ஈரான் பதற்றம்: இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா பயண எச்சரிக்கை வெளியீடு
இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் பயண எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் தீவிரமாகிவரும் நிலையில், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகள் ஈரான் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் விமான தாக்குதல்களுக்கு பிறகு, ரஷ்யா தனது குடிமக்களுக்கு ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் மக்கள் கூட்டங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் போன்ற இடங்களை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவும் தனது சுற்றுலா ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது. “நிலைமை எப்போது வேண்டுமானாலும் மோசமாகலாம், ஏவுகணை தாக்குதல்களும் நிகழலாம்,” என அவர்கள் எச்சரிக்கையிட்டுள்ளனர்.
ஈரான், ஈராக், சவூதி அரேபியா, எகிப்து மற்றும் சிரியாவுக்கும் அதே போன்ற எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய தூதரகம், ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றவும், தூதரகத்தின் சமூக ஊடகங்களை கவனிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள், ஈரானின் அணு திட்டங்களை தடுக்க இஸ்ரேல் மேற்கொண்ட செயல் என கூறப்படுகிறது. ஆனால் இது அப்பகுதியில் போருக்கு வழிவகுக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |