ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் புதிய உச்சத்தை எட்டிய இந்தியா
இந்தியா ஜூன் 2026-இல் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த அளவு சாதனை உயர்வை எட்டியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 4.5 பில்லியன் யூரோ மதிப்பிலான கச்சா எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ரஷ்ய புதைப்படிம எரிபொருள் இறக்குமதியின் 83 சதவீதம் ஆகும்.
மொத்தத்தில், இந்தியா ரஷ்யாவிலிருந்து 5.5 பில்லியன் யூரோ மதிப்பிலான ஹைட்ரோகார்பன்களை வாங்கியுள்ளது. இதன்மூலம், சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா ரஷ்யாவின் இரண்டாவது பெரிய வாடிக்கையாளராக உள்ளது.

இந்தியாவின் முக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகளவில் ரஷ்ய எண்ணெய் பெற்றுள்ளன. ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் 150 சதவீதம், IOC பரதீப் சுத்திகரிப்பு நிலையம் 126 சதவீதம், BPCL கோச்சி சுத்திகரிப்பு நிலையம் 83 சதவீதம் மற்றும் நயாரா வடிநார் சுத்திகரிப்பு நிலையம் 45 சதவீதம் அதிகரித்துள்ளன.
இந்தியாவின் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி அளவு 14 சதவீதம் உயர்ந்தது.
இருப்பினும், உலக சந்தை விலை குறைந்ததால் ரஷ்யாவின் தினசரி வருவாய் 8 சதவீதம் குறைந்து 348 மில்லியன் யூரோவாக ஆனது.
கச்சா எண்ணெய் தவிர, இந்தியா 488 மில்லியன் யூரோ மதிப்பிலான எண்ணெய் பொருட்கள் மற்றும் 444 மில்லியன் யூரோ மதிப்பிலான நிலக்கரியை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது.
முக்கியமாக, இந்திய சுத்திகரிப்பு நிலையங்களில் தயாரிக்கப்பட்ட 814 மில்லியன் யூரோ மதிப்பிலான எண்ணெய் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 369 மில்லியன் யூரோ மதிப்பிலானவை ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்டவை.
பிரித்தானியா, தடை விதிப்புகளுக்கு விதிவிலக்கு அளித்து, ஜாம்நகரில் தயாரிக்கப்பட்ட 63 மில்லியன் யூரோ மதிப்பிலான ஜெட் எரிபொருளை ஜூன் மாதத்தில் பெற்றுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் அதன் முக்கிய பங்கைக் காட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |