இரண்டு நண்பர்கள் பரம எதிரியான கதை... இஸ்ரேல் - ஈரான் மோதலின் விரிவானப் பின்னணி
ஈரானின் அணு ஆயுதம் நோக்கியுள்ள நகர்வு ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறும் என கடந்த பல ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ள இஸ்ரேல், திடீரென்று அந்த நாட்டின் மீது ஏவுகணை மற்றும் வான் தாக்குதலை முன்னெடுத்தது.
நண்பர்கள்
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கலாம் என்ற நெருக்கடியான சூழலில், மத்திய கிழக்கு மீண்டும் பற்றியெரிய இஸ்ரேல் ஒரு காரணமாக மாறியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தற்போது நடப்பது அறிவிக்கப்பட்ட நேரடிப் போர் அல்ல. ஆனால் அமெரிக்காவின் ஒப்புதலின் அடிப்படையில், இஸ்ரேல் தற்போது ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
மட்டுமின்றி, ஈரானின் பதில் தாக்குதலால் தடுமாறும் இஸ்ரேல் தற்போது அமெரிக்காவை தங்களுக்கு ஆதரவாக போரில் களமிறங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இரு நாடுகளும், குறிப்பாக 1979 ஈரானியப் புரட்சிக்கு முன்பு வரையில் நெருக்கமான நட்பு பாராட்டி வந்துள்ள வரலாறு உள்ளது.
ஆனால் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, இரு நாடுகளும் இரகசிய நடவடிக்கைகள், சைபர் தாக்குதல்கள், மறைமுக போர் மற்றும் உளவுத்துறைப் போர்களை உள்ளடக்கிய நீண்டகால, பன்முக நிழல் போரில் ஈடுபட்டு வருகின்றன.
ஈரானியப் புரட்சிக்கு முன்பு, ஈரான் ஷா முகமது ரெசா பஹ்லவி ஆட்சியின் கீழ் செயல்பட்ட போது இஸ்ரேலுடன் வலுவான தூதரக மற்றும் சிறப்பு உறவுகளைக் கொண்டிருந்தன.
இஸ்ரேலை நடைமுறை ரீதியாக ஒரு நாடாக அங்கீகரித்த சில பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகளில் ஈரானும் ஒன்று. இரு நாடுகளும் எண்ணெய், விவசாயம் மற்றும் இராணுவ உளவுத்துறை ஆகியவற்றில் ஒத்துழைத்து வந்தனர். இஸ்ரேலின் மொசாட் மற்றும் ஈரானின் SAVAK அமைப்புகள் உளவு ரீதியாக ஒத்துழைத்தனர்.
இஸ்லாமிய குடியரசாக
ஆனால் 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமியப் புரட்சி பஹ்லவி ஷாவைத் தூக்கியெறிந்து ஆயத்துல்லா ருஹோல்லா காமெனியை ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இதனையடுத்து ஈரான் ஒரு இஸ்லாமிய குடியரசாக மாறியதுடன் இஸ்ரேலை ஒரு எதிரி நாடாகவும் சட்டவிரோத சியோனிச ஆட்சியாகவும் அறிவித்தது.
இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை துண்டித்த ஈரான், ஹிஸ்புல்லா போன்ற இஸ்ரேல் எதிர்ப்பு குழுக்களை ஆதரிக்கத் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையே விரோதமான கருத்து மோதல்கள் இருந்தபோதிலும், ஈரான்-ஈராக் போரின் போது அமெரிக்காவின் இரகசிய ஒப்புதலின் கீழ், ஈரானுக்கு (அமெரிக்கா வழியாக) ஆயுத விற்பனையை எளிதாக்க இஸ்ரேல் உதவியது.
இருப்பினும் 1980களில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவின் ஆட்டம் அதிகரித்தது. 1983 பெய்ரூட் படைமுகாம் குண்டுவெடிப்பு உட்பட லெபனானில் இஸ்ரேலிய நலன்களைத் தாக்கத் தொடங்கியது. 1985-1990 களில் மேற்கத்தியர்கள் மற்றும் இஸ்ரேலிய முகவர்களை ஹிஸ்புல்லா கடத்தியது.
1990க்கு பிறகு இஸ்ரேலின் பகிரங்க எதிரிகளான லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கும், காஸாவில் ஹமாஸ் படைகளுக்கும் ஈரான் தமது ஆதரவை விரிவுபடுத்தியது. மட்டுமின்றி, 1992 ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் மீது குண்டுவெடிப்பு மற்றும் 1994 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் AMIA யூத சமூக மைய குண்டுவெடிப்பு உள்ளிட்டவைகளுக்கு ஈரான் ஆதரவளித்ததாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தல்
இந்த காலகட்டத்தில் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கியது, இஸ்ரேலை கலக்கமடையச் செய்தது. இதன் பின்னர் அணு ஆயுத ஈரான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் என்று இஸ்ரேலிய தலைவர்கள் தொடர்ந்து எச்சரிக்கத் தொடங்கினர்.
2010ல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தயாரித்த Stuxnet virus மூலமாக ஈரானிய அணு திட்டத்தை சேதப்படுத்தினர். இஸ்ரேலிய வங்கிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல்கள் மூலம் ஈரான் பதிலடி கொடுத்தது. 2010 மற்றும் 2012 க்கு இடையில், குறைந்தது நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டனர், இது இஸ்ரேலிய மொசாட்டின் வேலை என்று பரவலாக நம்பப்படுகிறது.
ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதம் வழங்கவும், இராணுவ ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஈரான் சிரியாவை ஒரு தளமாகப் பயன்படுத்தியது. ஆனால் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் சிரியாவில் உள்ள ஈரானிய ஆயுதத் தொடரணிகள் மற்றும் தளங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
முழு அளவிலான போரைத் தவிர்த்த போதிலும், இஸ்ரேலும் ஈரானும் நேரடி மோதல்களில் ஈடுபட்டு வந்தன. 2019 முதல், இரு நாடுகளும் பாரசீக வளைகுடா மற்றும் செங்கடலில் ஒருவருக்கொருவர் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி ட்ரம்பின் கீழ் அமெரிக்கா ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் (JCPOA - ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்) இருந்து விலகிய பிறகு, ஈரான் மீண்டும் செறிவூட்டலைத் தொடங்கியது. அப்போதில் இருந்து ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து பரப்புரை செய்து, சாத்தியமான இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகி வந்தது.
ஈரானுக்கு நெருக்கடி
முதல் முறையாக, ஏப்ரல் 2024ல் ஈரானும் இஸ்ரேலும் வெளிப்படையான, நேரடித் தாக்குதல்களில் ஈடுபட்டன. ஏப்ரல் 1 ஆம் திகதி டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மூத்த IRGC தளபதிகள் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 13-14 திகதிகளில் ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது - இஸ்ரேலிய பிரதேசத்தின் மீது ஈரானிய நேரடித் தாக்குதல் இதுவே முதல் முறை.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜோர்டானின் உதவியுடன் ஈரானின் பெரும்பாலான சரமாரி தாக்குதலை இஸ்ரேல் இடைமறித்தது. ஆனால் முழு அளவிலான போரைத் தவிர்ப்பதற்காக இரு தரப்பினரும் பின்னர் பின்வாங்கினார்கள்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பொறுப்புக்கு வந்ததன் பின்னர் ஈரானுக்கு நெருக்கடி அளிக்கத் தொடங்கினார். வெடிகுண்டு வீசப்படும் என்றும் மிரட்டினார்.
இந்த வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இஸ்ரேல், ஜனாதிபதி ட்ரம்பின் ஒப்புதலுடன் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கும் நோக்கத்துடன், ஜூன் 13, 2025 அன்று ஈரான் முழுவதும் டசின் கணக்கான இடங்களில் திடீர் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணைகளால் இஸ்ரேலின் டெல் அவிவ் உட்பட முக்கியமான நகரங்களை பதம் பார்த்து வருகிறது.
குறிப்பாக அணுசக்தி நிலையங்கள் அல்லது எண்ணெய் வழித்தடங்கள் சீர்குலைக்கப்பட்டால், தொடர்ந்து எழும் பதட்டங்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் என்றே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |