ஒரேயடியாக மாயமான ஈரானின் 400 கிலோ யுரேனியம்... புதிய பீதியை உருவாக்கும் அமெரிக்கா
பத்து அணு ஆயுதங்கள் தயாரிக்க போதுமான 400 கிலோ யுரேனியம் ஈரான் வசமிருந்து மாயமாகியுள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
பேரம் பேசும் பொருளாக
இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா GBU-57 குண்டுகளை வீசியதன் பின்னர் இந்த விவகாரம் கவனத்தில் வந்ததாகவும் வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
60 சதவீதம் வரையில் செறிவூட்டப்பட்ட அந்த யுரேனியம் ஈரானுக்கு ஒரு சக்திவாய்ந்த பேரம் பேசும் பொருளாகக் கருதப்படுகிறது. அணு ஆயுதமாக அந்த யுரேனியத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றால் 90 சதவீதம் வரையில் செறிவூட்ட வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கையில், அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு அந்த யுரேனியம் மற்றும் சில கருவிகளை ஈரான் ஒரு ரகசிய இடத்திற்கு மாற்றியிருக்கலாம் என குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே, அமெரிக்காவின் தாக்குதலுக்கு முந்தைய செயற்கைக்கோள் படங்களில், ஃபோர்டோ அணுமின் நிலையத்திற்கு வெளியே 16 லொரிகள் வரிசையாக நிற்பதைக் காட்டின. மட்டுமின்றி, அமெரிக்காவின் GBU-57 குண்டுகள் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீது வீசப்பட்டன.
தாக்குதலுக்குப் பிந்தைய படத்தில் மூன்று நிலையங்களுக்கும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாகக் காட்டப்பட்டது, ஆனால் லொரிகள் மாயமாகியுள்ளன. ஆனால் அந்த அணுசக்தி நிலையங்களில் இருந்து என்ன வெளியேற்றப்பட்டது அல்லது எங்கே கொண்டுசெல்லப்பட்டது என்பது தொடர்பான தகவல் ரகசியமாகவே உள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடை
இஸ்ரேல் உட்பட அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் அனைத்தும் அதை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை என கூறிவருவது போலவே ஈரானும் தொடர்ந்து விளக்கமளித்து வருகிறது.
மேலும், அணு ஆயுதங்கள் கைவசமில்லாத நாடுகள் மீதே பிறநாடுகள் அத்துமீறுவதும் தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாக கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் காரணமாக அணு ஆயுதங்களைக் கைவிட்ட உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அச்சுறுத்தியது. இந்த ஒப்பந்தத்தில் இதுவரை இஸ்ரேல் கையெழுத்திடவில்லை.
இஸ்ரேலின் முதல் சுற்று ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் அணு ஆயுதங்களைத் தேடவில்லை என்றும், அதை உருவாக்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.
ஆனால், 1995ல் இருந்தே ஈரான் இன்னும் சில வாரங்களில் அணு ஆயுதம் தயாரித்துவிடும் அது மத்திய கிழக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இஸ்ரேல் பரப்புரை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |