அடுத்த இலக்கு 140 டொலர்... மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்த ஈரான் சபாநாயகர் காலிபாஃப்
ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியைக் குறிவைத்து ஹார்முஸ் நீரிணையில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த கடற்படை முற்றுகையை ஈரான் கேலி செய்துள்ளது.
எதுவும் வெடிக்கவில்லை
ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்காவின் உத்திகள் தோல்வி கண்டுள்ளதையே ஈரான் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தமது சமூக ஊடகப் பக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்தையும் கேலி செய்துள்ளார்.

அதில், இதுவரை ஈரானின் எண்ணெய் கிணறுகள் எதுவும் வெடிக்கவில்லை என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 26 ஆம் திகதி தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்,
இன்னும் மூன்று நாட்களில் ஈரானின் எண்ணெய் கிணறுகள் மிக சக்திவாய்ந்த பேரழிவுச் செயல்முறையில் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் ட்ரம்ப் குறிப்பிட்ட அந்த மூன்று நாட்கள் கடந்த பின்னர், வணிகக் கப்பல் போக்குவரத்தின் மீதான கடல்வழி முற்றுகை, ஈரானின் எண்ணெய் உற்பத்தியை உடனடியாக முடக்கிவிடும் என எதிரிகள் கனவு கண்டார்கள் என காலிபாஃப் கேலி செய்துள்ளார்.
மூன்று நாட்கள், எதுவும் வெடிக்கவில்லை, வேண்டுமென்றால் அதை 30 நாட்களாக நீட்டித்து நேரலை செய்யலாம் என்றார். மேலும், ஈரான் மீது தற்போது பொருளாதார அழுத்தம் என்ற உத்தியை முன்னெடுத்ததற்கு, கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் போன்ற அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளின் பயனற்ற ஆலோசனைகளே காரணம் எனவும் காலிபாஃப் குற்றம் சாட்டியுள்ளார்.

140 டொலரை எட்டும்
அத்துடன், தற்போது 120 டொலரை எட்டவிருக்கும் எண்ணெய் விலை, அடுத்து 140 டொலரை எட்டும் என்பது உறுதி எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) முன்னாள் விமானப்படைத் தளபதியாகவும், 2005 முதல் 2017 வரையில் தெஹ்ரானின் மேயராகவும் பதவி வகித்த காலிபாஃப், பொறியியல் பின்னணியைக் கொண்டவர்; மேலும் ஈரானின் பாதுகாப்பு அமைப்பில் ஆழமான வேர்களைக் கொண்ட, ஒரு நடைமுறைவாதியான தீவிரப்போக்காளராகவும் இவர் நற்பெயர் பெற்றுள்ளார்.
மத்திய கிழக்கு பாதுகாப்பு மற்றும் அணுசக்தி விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவுடனான ஈரானின் பேச்சுவார்த்தைகளை அவர் வழிநடத்தி வருகிறார்.

ஈரானின் எண்ணெயை அந்நாட்டிற்குள்ளேயே முடக்கி வைக்கும் நோக்கில், ஈரானின் கடல்வழி வர்த்தகத்தின் மீது முற்றுகையிட அமெரிக்க இராணுவத்திற்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
உற்பத்தியைக் குறைத்து வருவாய் இழப்பைச் சந்திப்பதா அல்லது குழாய்கள் மற்றும் தேக்கங்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் அதீத அழுத்தத்தால் உள்கட்டமைப்பு சேதமடைவதா என்ற இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு ஈரானை இந்த நடவடிக்கை கட்டாயப்படுத்தும் என அமெரிக்கா நம்புகிறது.
ஆனால் இந்த முற்றுகையானது, ஈரானின் வருவாய் மற்றும் அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரத்தைப் பாதித்துள்ளது என்பதுடன் எண்ணெய் விலை உயர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |