ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த போராட்டம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்ட ஈரான்
விலைவாசி உயர்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த போராட்டமாக வெடித்ததன் பின்னணி குறித்து விசாரிக்க ஈரான் அரசாங்கம் ஆணையம் ஒன்றை அறிவித்துள்ளது.
உண்மை கண்டறியும்
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆவணங்களைச் சேகரித்து அறிக்கைகளைக் கேட்டு வருகிறது என ஈரானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபதேமே மொஹஜெரானி உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

ஆனால், போராட்டங்களைத் தூண்டிய பொருளாதாரக் கோரிக்கைகளில் மட்டுமே ஆணையம் கவனம் செலுத்துமா அல்லது போராட்டங்களின் போது ஏற்பட்ட இறப்புகளையும் விசாரிக்குமா என்பதை செய்தித் தொடர்பாளர் குறிப்பிடவில்லை.
விசாரணை முடிந்ததும், இறுதி அறிக்கை பொதுமக்களின் தகவலுக்காகவும், மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை, அரசாங்க வலைத்தளம் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியனின் கருத்துக்களை வெளியிட்டிருந்தது. அதில் கலவரத்திற்கான காரணங்களை விசாரிக்க நாங்கள் குழுக்களை நியமித்துள்ளோம் என குறிப்பிடப்படிருந்ததுடன், மேலதிக விவரங்களை வழங்கவில்லை.
டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், ஜனவரி 8 ஆம் திகதி தீவிரமடைந்து, இதில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் உட்பட 3,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரிவிக்கிறது.

வெட்கப்படுகிறோம்
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் படையினர் அல்லது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்காக வேலை செய்யும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பார்வையாளர்கள் என்று ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், ஈரானுக்கு வெளியே உள்ள மனித உரிமைகள் ஆர்வலர்கள், பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை குறிவைத்து தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த HRANA அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், போராட்டங்களின் உச்சக்கட்டத்தின் போது குறைந்தது 7,005 பேர் கொல்லப்பட்டனர் என்றே குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இப்படியான ஒரு சம்பவம் ஈரானில் நடந்துள்ளதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம் என ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் பதிவு செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |