10 மில்லியன் ரியால் நோட்டை வெளியிட்ட ஈரான்- பொருளாதார நெருக்கடி தீவிரம்
ஈரான் அதன் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மதிப்புள்ள பணத்தாளான (Currency Note) 10 மில்லியன் ரியால் நோட்டை வெளியிட்டுள்ளது.
தற்போது நடைபெறும் போர் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக நாட்டின் நாணய அமைப்பு கடுமையான அழுத்தத்தை சந்தித்து வருகிறது.
இந்த புதிய நோட்டு 7 அமெரிக்க டொலர் மதிப்புடையதாகும்.
வங்கிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன, பல ATM-கள் பணம் இன்றி காலியாகிவிட்டன. மின்னணு பண பரிவர்த்தனை முறைகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதால், மக்கள் காசோலைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தவிர்த்து, நேரடி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த பணத்தாளின் ஒரு பக்கத்தில் யாஸ்ட்டின் வரலாற்று சிறப்புமிக்க ஜாமே பள்ளிவாசலும், மறுபுறம் பண்டைய பாம் கோட்டையும் இடம்பெற்றுள்ளன.
சில வாரங்களுக்கு முன்பு 5 மில்லியன் ரியால் நோட்டும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரான் ரியால் தற்போது 1.6 மில்லியன் ரியாலுக்கு 1 அமெரிக்க டொலர் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஈரானில் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த ஆண்டில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. மக்கள் அடிப்படை தேவைகளை குறைத்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார சிக்கல்களால் ஜனவரியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அரசு கடுமையாக அடக்கியது. இணைய சேவைகள் நிறுத்தப்பட்டதால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது நடைபெறும் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள், குறிப்பாக அணு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சந்தையில் நம்பிக்கையை மேலும் குறைத்துள்ளன.
இந்நிலையில், 10 மில்லியன் ரியால் நோட்டின் அறிமுகம், நாட்டின் பொருளாதார நெருக்கடி எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |