கடைசி கட்டத்தில்... ட்ரம்பிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய ஐரோப்பிய நாடுகளின் முடிவு
ஈரானுக்கு எதிரான சில அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் உதவுவதில் இருந்து பிரான்சும் இத்தாலியும் விலகியுள்ளது.
பிரான்ஸ் தடுத்ததாக ட்ரம்ப்
ஈரான் மீதான ஒரு மாத காலப் போரில், ஐரோப்பாவைச் சேர்ந்த நேட்டோ கூட்டாளிகள் உதவிகரமாக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்த நிலையில், தற்போது பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் இந்த முடிவு பிளவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில், தங்களுக்குப் போதிய ஆதரவு அளிக்காததற்காக, நேட்டோ அமைப்பின் நீண்டகால நட்பு நாடுகளை ட்ரம்ப் கோழைகள் என்று விமர்சித்தார்.
செவ்வாய்க்கிழமையன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில் உதவாத நாடுகளை அவர் கடுமையாகச் சாடினார்.
இதனிடையே, இஸ்ரேலுக்கு இராணுவப் பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் தங்கள் நாட்டின் வான்பரப்பில் பறப்பதை பிரான்ஸ் தடுத்ததாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
மேலும், ட்ரூத் சமூக ஊடகத்தில், பிரான்ஸ் தங்களுக்கு உதவிகரமாக இல்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால் ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்தே தங்களின் கொள்கை முடிவு இதுவென்றே பிரான்ஸ் பதிலளித்துள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், ஈரானுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படவுள்ள அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு செல்ல, இஸ்ரேல் பிரான்சின் வான்வெளியைப் பயன்படுத்த விரும்பியிருந்தது.
மேலும், இஸ்ரேலுக்கு வெடிபொருட்களை அனுப்புவதை பிரான்ஸ் தீவிரமாகத் தடுத்து வருவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், பிரான்சிடமிருந்து மேற்கொள்ளும் அனைத்துப் பாதுகாப்புத் கொள்முதல்களையும் இஸ்ரேல் நிறுத்திவிடும் என்றும், பிரெஞ்சு இராணுவத்துடன் எவ்விதப் புதிய ஈடுபாடும் கொண்டிருக்காது என்றும் அமைச்சகம் தெரிவித்தது.

ஸ்பெயின் நியாயப்படுத்தியது
இதனிடையே, மத்திய கிழக்கு நோக்கிச் செல்வதற்கு முன்னதாக, சிசிலியில் உள்ள சிகோனெல்லா விமானத் தளத்தில் தரையிறங்க அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு, இத்தாலி கடந்த வாரம் அனுமதி மறுத்தது.
உள்ளூர் நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கக் குண்டுவீச்சு விமானங்கள் சில மத்திய கிழக்கு நோக்கிப் பறந்து செல்வதற்கு முன், கிழக்கு சிசிலியில் உள்ள தளத்தில் தரையிறங்கவிருந்தன.
ஆனால், இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி சிறப்பு அனுமதியை அமெரிக்கா கோரியதால், அது நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஈரான் மீதான தாக்குதல்களில் ஈடுபடும் அமெரிக்க விமானங்களுக்குத் தனது வான்வெளியை முழுமையாக மூடிய முடிவை ஸ்பெயின் நியாயப்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் தனது தளங்களை, நேட்டோ கூட்டாளிகளின் கூட்டுப் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவும் தமக்கு உதவியாக இல்லை என ட்ரம்ப் விமர்சித்திருந்தார். அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அனைத்தும் நேட்டோ உறுப்பு நாடுகளாகும்; ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அமெரிக்கத் தளமான 'ராம்ஸ்டைன்' (Ramstein) அமைந்துள்ள ஜேர்மனியும் ஒரு நேட்டோ உறுப்பு நாடாகும்.
போரின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்கா அந்தத் தளத்தைப் பயன்படுத்துவதற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று ஜேர்மனி கூறியது. ஆனால் ஈரான் மீதான போர் சட்டத்திற்கு புறம்பானது என ஜேர்மனியின் ஜனாதிபதி Frank-Walter Steinmeier கூறியதை அடுத்து இந்த விவகாரம் நாடாளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |