இஸ்ரேலின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்... நாடொன்றிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிராக ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை எச்சரித்துள்ளது.
பொறுமைக்கும் எல்லை உண்டு
பிராந்தியத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பதற்ற அதிகரிப்பைத் தொடர்ந்தே ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை எச்சரித்துள்ளது. முன்னாள் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் தளபதியும், ஈரானின் நலன்சார் மன்றத்தின் தற்போதைய செயலாளருமான மொஹ்சென் ரெஸாயி தெரிவிக்கையில்,

ஈரான் எல்லா வகையிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தாலும், ஒரு தெளிவான எல்லையை வகுத்துள்ளது என்றார். அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளுடனான போரின்போது, வளைகுடா அண்டை நாடுகளின் மீது ஈரான் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதல்கள் சிலவற்றின் இலக்காக அமெரிக்கத் தளங்களுக்கு இடமளித்திருந்த ஐக்கிய அரபு அமீரகம் இருந்துள்ளது.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக ஐக்கிய அமீரகமும் பதிலடித் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவில், ஈரான் நட்பிற்கான வழிகளை அடைத்துவிடவில்லை என்றும், ஆனால், ஈரானின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் ரெஸாய் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நெருக்கமான பரிமாற்றங்களும் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம்; இஸ்ரேலின் சதித்திட்டங்களிலும் சூழ்ச்சிகளிலும் ஐக்கிய அரபு அமீரகம் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் ரெஸாய் அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலுடன் நெருக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரே அணுமின் நிலையத்தின் எல்லையில் ட்ரோன் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து ஈரான் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தை எந்தவொரு தூண்டுதலும் இல்லாத பயங்கரவாதத் தாக்குதல் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்துடன் உருவான ஆபிரகாம் ஒப்பந்தங்களின் கீழ், 2020-ஆம் ஆண்டில் பஹ்ரைனுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலை அங்கீகரித்த முதல் வளைகுடா நாடாகும்.

தனது பொருளாதார எதிர்காலத்தை அச்சுறுத்திய ஈரானியத் தொடர் தாக்குதல்களை எதிர்கொள்ள, அரபு அமீரகம் இஸ்ரேலுடன் நெருக்கமானதுடன், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பணியாளர்களையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஈரான் மீதானப் போர் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள், இஸ்ரேலிய ஒத்துழைப்பை எதிர்காலத்திற்கான ஒரு முன்மாதிரியாக முன்னிறுத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |