உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை மூடல்... எண்ணெய் சந்தைகளுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை
ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் ஈரானிய ட்ரோன் தாக்குதலை அடுத்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றை மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்ச பாதிப்பு
எண்ணெய் விலை உயர்வு உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சங்களுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

போர் வெடித்ததிலிருந்து, ஈரான் ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்க நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதலானது, 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோல் விலையை மிக வேகமாக உயர்த்த காரணமாகிறது.
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் தொடுக்கும் முன்னர் 72 டொலராக இருந்த எண்ணெய் விலை, திங்களன்று பீப்பாய்க்கு 120 டொலர் என உச்சத்தை எட்டியது.
இது இன்னொரு விலைவாசி உயர்வை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. உலகப் பொருளாதாரத்தில் அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியில், ஹார்முஸ் நீரிணையில் தனது பிடியை இறுக்கிக் கொண்டுள்ளதால், வளைகுடாவின் முக்கிய சுத்திகரிப்பு நிலையங்களை மூட ஈரான் முயற்சிப்பதாகத் தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை, ஈரானிய ட்ரோன்கள் ருவாய்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கியதால் தீ விபத்து ஏற்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மத்திய கிழக்கில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமான ருவாய்ஸ், ஒரு நாளைக்கு 922,000 பீப்பாய்களை சுத்திகரிக்க முடியும் மற்றும் நாட்டின் ரசாயனம், உரம் மற்றும் தொழில்துறை எரிவாயு ஆலைகளுக்கான மையமாக செயல்படுகிறது.

முன்னதாக, ட்ரோன் தாக்குதலால் ருவாய்ஸ் தொழில்துறை நகரில் தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்தது. உலகின் மிகப்பெரிய நான்காவது சுத்திகரிப்பு ஆலையாகும் இந்த ருவாய்ஸ்.
மோசமான நெருக்கடி
ஹார்முஸ் நீரிணை தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளதால் ஏற்கனவே தத்தளித்து வரும் எண்ணெய் சந்தைகளுக்கு இந்த ருவாய்ஸ் மூடல் என்பது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.
இதனிடையே, பெட்ரோல் விலை முதல் முறையாக லிற்றருக்கு 2 பவுண்டை எட்டக்கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரித்தானியர்களை வாகனம் ஓட்டுவதைக் குறைக்க வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருந்தால் மிக மோசமான நெருக்கடி ஏற்படும் என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. இஸ்ரேஸ் பிரதமர் நெதன்யாகு உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் இருந்து தப்பிக்க மத்திய கிழக்கில் உருவாக்கியுள்ள போர் தற்போது எண்ணெய் விநியோகத்தை கடுமையாக சீர்குலைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கிலிருந்து ஒரு லிற்றர் எண்ணெய் கூட வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று திங்கட்கிழமை ஈரான் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |