பிரித்தானியாவின் ஃபாஸ்லேன் அணு ஆயுதத் தளத்தில் ஈரானிய உளவாளிகள் கைது
ஃபாஸ்லேன் கடற்படைத் தளத்திற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடம்
இந்த விவகாரம் தொடர்பில் ஸ்கொட்லாந்து பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், வியாழக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில், HM கடற்படைத் தளம் Clyde-க்குள் நுழைய முயன்ற இருவர் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது.

இதில், 34 வயது ஈரானிய ஆடவர் ஒருவரும், 31 வயது ருமேனியப் பெண்மணி ஒருவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மார்ச் 23, திங்கட்கிழமையன்று டம்பார்டன் ஷெரிஃப் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். அந்த இருவரிடம் உள்ளே நுழைவதற்கான முறையான அனுமதிச் சீட்டுகள் இல்லாததால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆனால் அவர்களின் நடத்தைகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில் உள்ள இந்தக் கடற்படைத் தளம், ராயல் கடற்படையின் தலைமையகமாகும். மேலும், டிரைடென்ட் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட வான்கார்ட் கப்பல்கள் உட்பட பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களும் இங்கு உள்ளன.
இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு ராணுவத் தளம் மீது ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதற்றத்தை அதிகரித்த நிலையில், அந்த இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து காவல்துறை அறிவித்தது.
ஆபத்தில் ஆழ்த்தி வருகிறார்
இதனிடையே, அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் பிரித்தானியாவும் இணைந்தால், ஈரான் தனது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தும் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி வலியுறுத்தினார்.
சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள அராக்ச்சி, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் விருப்பத்தின் பேரில் தொடுக்கும் போரில், எந்தப் பங்கும் வகிக்க பிரித்தானிய மக்களில் பெரும்பான்மையினர் விரும்பவில்லை.

பிரதமர் ஸ்டார்மர் தனது சொந்த மக்களைப் புறக்கணித்துவிட்டு, ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பிரித்தானியாவின் தளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், பிரித்தானியமக்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தி வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
ஃபாஸ்லேன், டிரைடென்ட் ஆயுதம் தாங்கிய நான்கு பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும், கடற்படையின் ஏழு அஸ்ட்யூட்-வகை அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் இருப்பிடமாக உள்ளது.
கிளாஸ்கோவிற்கு வடமேற்கே 25 மைல் தொலைவில் அமைந்துள்ள அந்தத் தளம், அணு உலைகளால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |