போர் தொடங்கியது... பகிரங்கமாக அறிவித்த ஈரானின் உயர் தலைவர்
பெரிய ஆச்சரியம் காத்திருப்பதாக இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்ததன் பின்னர் போர் தொடங்கியுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார் ஈரானின் உயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமெனி.
போர் தொடங்குகிறது
இஸ்ரேலுக்கு ஆதரவாக தொடர்ந்து பின்னணியில் இயங்கிவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக ஈரானின் உயர் தலைவர் தொடர்ச்சியான பேரழிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு, ஒரு பழங்கால நகரத்தின் மீது நெருப்புப் பந்துகள் பொழிவதைக் காட்டும் ஒரு அச்சுறுத்தும் படத்தின் பதிவின் மூலம் ஆயத்துல்லா அலி காமெனி இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தார்.
அத்துடன் ஃபார்சி மொழியில், உன்னதமான ஹைதரின் பெயரால், போர் தொடங்குகிறது என்று அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஹைதர் அலி என்பவர் ஷியா முஸ்லிம்களின் முதல் இமாமாகவும், தீர்க்கதரிசி முகமதுவின் சரியான வாரிசாகவும் கருதப்படுகிறார்.
ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்ட பதிவு ஒன்றில், 'பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும்' என்றும் சியோனிஸ்டுகளுக்கு நாம் கருணை காட்ட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஈரானிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், இன்றிரவு, ஒரு பெரிய ஆச்சரியம் நிகழும் - உலகம் பல நூற்றாண்டுகளாக நினைவில் வைத்திருக்கும் ஒன்று என குறிப்பிட்டது.
காமெனிக்கு கொலை மிரட்டல்
வெளியான தகவலின் அடிப்படையில், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தளத்தில் நான்கு அமெரிக்க B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் குண்டுவீச்சு விமானங்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே நிபந்தனையற்ற சரணடைதல் வேண்டும் என ஈரானிடம் ட்ரம்ப் வலியுறுத்தினார்.
அத்துடன் ஈரானின் உயர் தலைவர் காமெனிக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இதனிடையே, அடுத்துவரும் நாட்களில் சக்திவாய்ந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, தண்டனை நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |