மொத்த மத்திய கிழக்கும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில்... அமெரிக்க தூதரின் பேச்சால் வெடித்த சர்ச்சை
மத்திய கிழக்கின் பெரும்பகுதியை இஸ்ரேல் கைப்பற்றினாலும் தாம் ஆட்சேபிக்கப் போவதில்லை என்று இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி கூறியுள்ளார்.
ஆபிரகாமின் சந்ததியினருக்கு
வெள்ளிக்கிழமை ஒளிபரப்பான டக்கர் கார்ல்சனுடனான ஒரு நேர்காணலில், இஸ்ரேலின் புவியியல் எல்லைகள் குறித்து அழுத்தமாக பேசிய ஹக்காபி, அது பைபிளில் குறிப்பிட்டுள்ளது என்றும் வாதிட்டுள்ளார்.

ஈராக்கில் யூப்ரடீஸ் நதிக்கும் எகிப்தில் நைல் நதிக்கும் இடைப்பட்ட பகுதி உட்பட, ஆபிரகாமின் சந்ததியினருக்கு நிலத்தை வழங்குவதாக விவிலியத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கார்ல்சன் ஹக்காபியிடம் கூறினார்.
அத்தகைய ஒரு பகுதி என்பது நவீன கால லெபனான், சிரியா, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும். ஆனால், இஸ்ரேல் இப்பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றினால் நன்றாக இருக்கும் என்று கடந்த ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் இஸ்ரேல் தூதராக நியமிக்கப்பட்ட ஹக்காபி கூறியுள்ளார்.
ஹக்காபியின் அந்தக் கருத்தால் அதிர்ச்சியடைந்த கார்ல்சன், இஸ்ரேல் முழு பிராந்தியத்தையும் கைப்பற்றுவதை ஹக்காபி உண்மையில் ஏற்றுக்கொள்வாரா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஹக்காபி, அவர்களுக்கு அந்த நிலம் தேவையில்லை, அவர்கள் அதை கோரவும் இல்லை என்றார்.
கிறிஸ்தவ சியோனிஸ்ட் மற்றும் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான ஹக்காபி, பின்னர் தனது கருத்தை ஓரளவு மிகைப்படுத்தப்பட்டவை என்று கூறி பின்வாங்கினார். இருப்பினும், அவர் தனது மத விளக்கத்தின் அடிப்படையில் இஸ்ரேலிய விரிவாக்கத்திற்கான கதவைத் திறந்து வைத்துள்ளார்.
அத்துடன், இந்தப் பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்றால், அந்தப் போரில் இஸ்ரேல் வெல்லும், அதனால் அந்த நிலம் இஸ்ரேலுக்கு சொந்தம் என்பது இன்னொரு வாதம் என்றும் ஹக்காபி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான தடை ஆகியவை சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாக இருந்து வருகின்றன.
மாபெரும் இஸ்ரேல்
2024 ஆம் ஆண்டில், சர்வதேச நீதிமன்றம் (ICJ) பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என்றும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
ஆனால் இஸ்ரேலிய சட்டம் நாட்டின் எல்லைகளை தெளிவாக வரையறுக்கவில்லை. இஸ்ரேல் சிரியாவில் உள்ள கோலன் குன்றுகளையும் ஆக்கிரமித்துள்ளது. 1981 இல் சட்டவிரோதமாக தங்கள் பகுதியாக இணைத்துக்கொண்டது.

சிரியப் பகுதியின் மீதான இஸ்ரேலின் இறையாண்மையை அங்கீகரிக்கும் ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட சில இஸ்ரேலிய அரசியல்வாதிகள், விரிவாக்கப்பட்ட எல்லைகளுடன் கூடிய மாபெரும் இஸ்ரேல் என்ற கருத்தை வெளிப்படையாக ஊக்குவித்துள்ளனர்.
மட்டுமின்றி, 2023ல் இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் என்பவரின் கருத்து சர்வதேச கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாலஸ்தீன பிரதேசங்கள் மற்றும் லெபனான், சிரியா மற்றும் ஜோர்டானின் சில பகுதிகளை இஸ்ரேலின் ஒரு பகுதியாக உள்ளடக்கிய ஒரு வரைபடத்தை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |