ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர், அந்த நாட்டிடம் அணுகுண்டு உள்ளனவா? எவ்வாறு அந்த நிலைக்கு எட்டியது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
12,241 அணு ஆயுதங்கள்
இஸ்ரேல் தன்னிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்றும், ஏனெனில் தாங்கள் அணு ஆயுதத் திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் தொடர்ந்து பலமுறை கூறி வருகிறது.
ஆனால் SIPRI ஆய்வறிக்கையின் படி, தற்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் என ஒன்பது அணு ஆயுத நாடுகள் உள்ளன.
ஜூன் 16ம் திகதி வெளியாகியுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்த 9 நாடுகளிடமும் 12,241 அணு ஆயுதங்கள் கைவசம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் சுமார் 9614 அணு ஆயுதங்கள் சாத்தியமான பயன்பாட்டிற்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைகள் மற்றும் விமானங்களுடன் 3912 அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலையில் உள்ளதாகவும், எஞ்சியவை மத்திய சேமிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 2,100 அணு ஆயுதங்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தப்படும் நிலையில் தயாராக உள்ளது. இந்த நிலையில் SIPRI வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அணு ஆயுதங்களை வைத்திருப்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாத இஸ்ரேல், அதன் அணு ஆயுதத் திட்டங்களை நவீனமயமாக்குவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எப்போது வேண்டுமானாலும்
2024 ஆம் ஆண்டில், அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளின் ஜெரிகோ வரிசை ஏவுகணை உந்துவிசை அமைப்பின் சோதனையை இஸ்ரேல் நடத்தியது.
அத்துடன் டிமோனாவில் உள்ள இஸ்ரேலின் புளூட்டோனியம் உற்பத்தி உலை தளத்தையும் மேம்படுத்துவதாகத் தெரிகிறது. வெளியாகியுள்ள தரவுகலின் அடிப்படையில், இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அவை அனைத்தும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் இஸ்ரேல் தங்களிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்றும், அணு ஆயுதத் திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறி வருகிறது. இதனாலையே, ஈரானுடனான 12 நாட்கள் நீடித்த மோதலில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் மிரட்டல் விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |