ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி படுகொலை... அறிகுறிகளை குறிப்பிடும் இஸ்ரேல் ஊடகங்கள்
அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய முதல் அலைத் தாக்குதல்களில் ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டதற்கான வலுவான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் உயர் தலைவர்
இஸ்ரேலின் Channel 12 செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று காலை நடந்த வான்வழித் தாக்குதல்களின் போது ஈரானின் உயர் தலைவர் கொல்லப்பட்டதற்கான அல்லது அவர் குறைந்தபட்சம் காயமடைந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக பெயர் குறிப்பிடப்படாத இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்னெடுத்துள்ள இந்தத் தாக்குதல்கள் ஈரானிய ஆட்சியின் தலைமைக்கும் அதன் இராணுவத் தளபதிகளுக்கும் மிகக் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருந்தனர்.
சனிக்கிழமை காலை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இரட்டைத் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து காமெனியைப் பற்றி எந்த தகவலும் இல்லை. இஸ்ரேலுடனான கூட்டு ஏவுகணைத் தாக்குதல்களின் முதல் அலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் உயர் தலைவரை குறிப்பாக குறிவைத்ததாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைநகர் தெஹ்ரானில் உள்ள காமெனி அலுவலகங்களுக்கு அருகில் முதல் குண்டுவீச்சு நடந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், காமெனி கொல்லப்பட்டாரா என்பதில் உறுதி இல்லை என்றே இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்,
மேலும், அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுப்பதை மொத்தமாக விரும்பாத இஸ்ரேல், திடீர் தாக்குதலை முன்னெடுக்கும் என்பதை அறிந்திருந்த ஈரானிய நிர்வாகம் தெஹ்ரானில் இருந்து உயர் தலைவரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.

இன்றைய இராணுவ நடவடிக்கையில் தெஹ்ரானில் உள்ள காமெனியின் அரண்மனை மற்றும் வளாகம் இரண்டும் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சரணடைய வேண்டும்
ஆனால், தனக்குத் தெரிந்தவரை ஆயத்துல்லா உயிருடன் இருப்பதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச் கூறியுள்ளார். இதனிடையே, ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைவரும், போராட்டக்காரர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் மிருகத்தனமான ஒடுக்குமுறையின் கட்டமைப்பாளருமான அவர் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் இருந்து வெளியாகியுள்ள தகவலில், IRGC-ன் தளபதி ஜெனரல் முகமது பாக்பூர் மற்றும் மூத்த தளபதிகள் பலர் இதில் கொல்லப்பட்டுள்ளனர் என்றே தெரிய வருகிறது.
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதலில் தெஹ்ரான், புஷேர், கோம், கராஜ், கெர்மன்ஷா மற்றும் இஸ்பஹான் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் தெஹ்ரானில் காமெனியின் குடியிருப்பு மற்றும் அதன் வளாகம், புலனாய்வு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஆயத்துள்ளா சரணடைய வேண்டும் அல்லது கொல்லப்படுவார் என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து டெல் அவிவ், ஹைஃபா மற்றும் ஜெருசலேம் உட்பட இஸ்ரேல் முழுவதும் கடுமையான பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் பதிலளித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |