காஸா நோக்கி பயணம்... கிரெட்டா துன்பெர்க்கிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் இராணுவம்
கிரேட்டா துன்பெர்க் மற்றும் பிற சமூக ஆர்வலர்களுடன் பயணப்படும் உதவிப் படகு காஸா பகுதியை அடைவதைத் தடுக்க மொத்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் அரசாங்கம் சபதம் செய்துள்ளது.
முற்றுகையை உடைத்து
பாலஸ்தீனப் பகுதியின் மீதான தங்களது கடற்படை முற்றுகையை உடைக்க இஸ்ரேல் யாரையும் அனுமதிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார், இது ஹமாஸ் படைகள் ஆயுதங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், யூத எதிர்ப்பாளர் கிரேட்டா மற்றும் அவரது சக ஹமாஸ் ஆதரவாளர்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்த விரும்புவது என்னவென்றால், நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும், எந்த காரணத்தாலும் காஸாவிற்குள் நுழைய முடியாது என்றார்.
காலநிலை பிரச்சாரகரான கிரேட்டா மற்றும் 12 ஆர்வலர்களுடன் மேட்லீன் கப்பலில் காஸாவிற்கான உதவிப்பொருட்களுடன் பயணப்பட்டுள்ளனர். காஸா மீதான இஸ்ரேல் கடற்படையின் கடல் முற்றுகையை உடைத்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பயணத்திற்காக அந்தக் கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிசிலியிலிருந்து புறப்பட்டது.
20 மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் வளர்ந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கப்பல் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காஸாவின் கடல் எல்லையை அடைய திட்டமிட்டுள்ளதாக ஆர்வலர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம், காஸாவில் இருந்து சுமார் 160 கடல் மைல் தொலைவில் யாரோ ஒருவர் தங்கள் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை முடக்கியுள்ளதாக மேட்லீன் கப்பலில் உள்ள பிரேசில் நாட்டவரான சமூக ஆர்வலர் ஒருவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்படுவார்கள்
சுமார் இரண்டரை மாதம் காஸாவிற்கான அனைத்து உதவிகளையும் முடக்கி, மனிதாபிமானமற்ற கொடூர நடவடிக்கையை முன்னெடுத்த இஸ்ரேல், கடந்த மாதம் சில அடிப்படை உதவிகளை காஸாவிற்குள் அனுமதித்தது.
ஆனால் முற்றுகை நீக்கப்பட்டு இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை நிறுத்தாவிட்டால் காஸாவில் பஞ்சம் ஏற்படும் என்றும் பட்டிணிச்சாவு அதிகரிக்கும் என்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே கடந்த மாதம் மேட்லீன் கப்பல் காஸாவை நோக்கி பயணப்பட்டது. ஆனால் மால்டாவிற்கு அப்பால் சர்வதேச கடலில் பயணம் செய்யும் போது ட்ரோன் தாக்குதலை அடுத்து பயணம் கைவிடப்பட்டது.
குறித்த தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் இருப்பதாகவே அந்த குழு குற்றஞ்சாட்டியது. தற்போது இரண்டாவது முறையாக பயணப்பட்டுள்ள கப்பலில் கிரேட்டா துன்பெர்க் இடம்பெற்றுள்ளார்.
மேலும், காஸாவிற்குள் கப்பல் நுழைந்தால், முற்றுகையிடப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்களை உடனடியாக நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |