அயத்துல்லா காமெனியை படுகொலை செய்யவே தாக்குதல்: உண்மையை உடைத்த இஸ்ரேல்
ஈரான் மீதான சமீபத்திய மோதலின் போது, அந்த நாட்டின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனியை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பார்வையில் பட்டிருந்தால்
இருப்பினும், காமெனி தலைமறைவாகிவிட்டதால் அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்றார். ஈரானிய தலைவரை ஒழிப்பதற்கான வாய்ப்பை இஸ்ரேல் தீவிரமாக தேடி வருவதாகவும் அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான மோதலின் போது அவர் எங்கள் பார்வையில் பட்டிருந்தால், கண்டிப்பாக படுகொலை செய்திருப்போம் என்றும் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். அவரை தீவிரமாகத் தேடியதாகவும், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது என்றும் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
12 நாட்கள் நீடித்த மோதலில் காமெனியே நேரடி இலக்காக இருந்தார் என்பதை இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக உறுதிப்படுத்துவது இதுவே முதல் முறை.
இதுவரை, இஸ்ரேலின் கவனம் மொத்தம் ஈரானின் அணுசக்தி தளங்களை சேதப்படுத்துவதில் மட்டுமே இருந்தது என கூறி வந்த நிலையில், தற்போது அமைச்சர் காட்ஸ் தங்களின் நோக்கம் எதுவென்று வெளிப்படையாக தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொல்ல முடியவில்லை
காமெனி துரிதமாக செயல்பட்டு தலைமறைவாகி, ஈரானிய இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டார் என்றும், இதனால் படுகொலை பணி சாத்தியமற்றதாகிவிட்டது எனவும் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
தங்களின் திட்டம் எதுவென்பதைப் புரிந்துகொண்டு, நெருங்க முடியாத மறைவிடத்திற்கு சென்றுவிட்டார், அதனாலையே எங்களால் அவரைக் கொல்ல முடியவில்லை என்றும் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
12 நாட்கள் நீடித்த மோதலின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சமூக ஊடகங்களில் காமெனி தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டார், அமெரிக்கா காமெனியின் இருப்பிடத்தை அறிந்திருப்பதாகவும், அவரை ஒழிக்க முடியும் என்றும், ஆனால் அதைச் செய்யும் முடிவுக்கு வரவில்லை என்றும் சூசகமாகக் கூறினார்.
அத்துடன் ஆட்சி மாற்றம் என்பது தற்போதைய அமெரிக்கக் கொள்கை அல்ல என்றும் பின்னர் அவர் விளக்கமளித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |