ஈரானின் கார்க் தீவு அருகே எண்ணெய் கசிவு... செயற்கைக்கோள் படங்களால் அச்சம்
ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவுக்கு அருகே, பல டசின் சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள கடற்பகுதியை எண்ணெய் கசிவு மூடியுள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.
எண்ணெய் கசிவு
இந்த வாரம் வெளியிடபப்ட்டுள்ள செயற்கைக்கோள் படங்களில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. படங்களில் சாம்பல் மற்றும் வெள்ளை நிறப் படலமாகத் தோன்றும் அது எண்ணெய் கசிவு என சந்தேகிக்கப்படுகிறது.

வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் எண்ணெய் கசிவு சுமார் 45 சதுர கிலோமீற்றர் பரப்பளவை மூடியுள்ளது. மட்டுமின்றி, 70 நாட்களுக்கு முன்பு ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போருக்குப் பிறகு நிகழ்ந்தவற்றிலேயே, அநேகமாக இதுவே மிகப்பெரிய சம்பவமாக இருக்கலாம் என காலநிலை ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சாத்தியமான கசிவுக்கான காரணமும், அது தொடங்கிய இடமும் தற்போது உறுதி செய்யப்படவில்லை. போரின் ஆரம்பத்தில் அமெரிக்கப் படைகள் இராணுவ இலக்குகளை அழித்ததாகக் கூறிய கார்க் தீவு, ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதிக்கான மையமாக விளங்குகிறது.
கார்க் தீவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் பெரும்பாலும் சீனாவிற்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த நிலையில், ஈரானில் இருந்து எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் வகையில் சமீப வாரங்களாக அமெரிக்கா துறைமுகங்கள் மீதான முற்றுகையை முன்னெடுத்து வருகிறது.
ஏற்றுமதி முடங்கியுள்ளது
இதனால், ஈரானில் இருந்து வழக்கமான எண்ணெய் ஏற்றுமதி ஸ்தம்பித்துள்ளது. மேலும், எண்ணெய் உற்பத்தி தடைபட்டால், அதனால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் என ஈரானை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

தற்போது கார்க் தீவில் இருந்து ஏற்றுமதி முடங்கியுள்ளது, எண்ணெய் கசிவுக்கு காரணமாக அமைந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போரினால், வளைகுடாவில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் சிக்கிக்கொண்டுள்ளன.
இது கச்சா எண்ணெய் விநியோகத்தில் உலகின் மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்தியதுடன், எண்ணெய் பொருட்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் உலகளாவிய விநியோகத்தையும் பாதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |