பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள்
சிந்து நதி வறண்டு போனதால், பாகிஸ்தானின் காரீஃப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய உயிர்நாடியாக
இந்தியாவுடனான மோதல் போக்கிற்கும், பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதற்கும் பாகிஸ்தான் விலை கொடுக்கத் தொடங்கியுள்ளது. மட்டுமின்றி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்த பிறகு, நீர் வரத்து மொத்தமாகக் குறைந்தது.
பஞ்சாப், சிந்து மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் முக்கிய உயிர்நாடியாக சிந்து நதி உள்ளது, அப்பகுதி மிகவும் வளமானவை மற்றும் நாட்டின் உணவு கிண்ணமாகவும் கருதப்படுகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தானின் IRSA ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜூன் 16 அன்று இந்தியா வெறும் 1.33 லட்சம் கனஅடி தண்ணீரை மட்டுமே விடுவித்ததாகவும், இது கடந்த ஆண்டு இதே நாளில் விடுவித்த 1.6 லட்சம் கனஅடிகளை விட 16.87% குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தப் பற்றாக்குறை காரீஃப் பயிரை கடுமையாகப் பாதிக்கும் என்றும், பயிர் விளைச்சலையும் கிராமப்புற வருமானத்தையும் அழிக்கும் என்றும் அச்சுறுத்துகிறது.
மட்டுமின்றி, பருவமழைக்கு இன்னும் குறைந்தது இரண்டு வாரங்களாவது உள்ளது, அந்த நேரத்தில் பயிர் காய்ந்து போகக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது.
பாதிக்கப்படும் நெருக்கடி
மேலும் பாகிஸ்தானுடன் நீர்நிலை தரவுகளைப் பகிர்ந்து கொள்வதையும் நிறுத்தியது. இந்த நிலையிலேயே காரீஃப் பயிர்கள் பாதிக்கப்படும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை பாகிஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளது.
பாகிஸ்தானில், காரீஃப் பயிர்கள் காரீஃப் பருவத்தில் பயிரிடப்படுகின்றன, இது பொதுவாக விதைப்புக்காக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும், அறுவடைக்காக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் நீடிக்கும்.
முக்கிய காரீஃப் பயிர்களில் அரிசி, கரும்பு, பருத்தி, சோளம் மற்றும் பாசிப்பயறு மற்றும் மசி போன்ற பல்வேறு பருப்பு வகைகள் அடங்கும். காரீஃப் பருவ பயிர்களின் வெற்றி, பருவமழையின் சரியான நேரத்தில் வருகை மற்றும் போதுமான தீவிரத்தைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |