ஈரானின் உச்ச தலைவரை பலி வாங்கினால் போர் முடிவுக்கு வரும்: கொந்தளிக்கும் இஸ்ரேல் பிரதமர்
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியை படுகொலை செய்தால் மட்டுமே மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கமேனியைக் கொல்ல
அலி கமேனியை படுகொலை செய்வதால் மோதல் ஒன்றும் தீவிரமடைய வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ள பிரதமர் நெதன்யாகு, மோதலை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி அது மட்டுமே என்றார்.
இஸ்ரேல் இராணுவம் ஈரானின் அணுசக்தி திட்டத்தைத் தாக்கத் தொடங்கியதிலிருந்து, கடந்த வாரம் முதல் ஈரானும் இஸ்ரேலும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
அத்துடன் ஈரானின் உயர் அணு விஞ்ஞானிகள் மற்றும் இராணுவ தளபதிகளை படுகொலை செய்ததாக அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் கூறி வந்தாலும், இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே, ஈரானிய உச்ச தலைவரைக் கொல்லும் நெதன்யாகுவின் திட்டங்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறியதாக தகவல் கசிந்தது.
மட்டுமின்றி, இதுவரை, ஈரான் மீதான தாக்குதல்களில் இணைய இஸ்ரேலின் கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இருப்பினும், ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீழ்த்துவதில் இஸ்ரேலுக்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்து உதவி வருகிறது.
இந்த நிலையில் கமேனியைக் கொல்ல உத்தரவிடுவாரா என்ற கேள்விக்கு, தற்போதைய சூழலில் என்ன செய்ய வேண்டுமோ அதை இஸ்ரேல் செய்து கொண்டிருக்கிறது என்றார் நெதன்யாகு.
நாளை நியூயார்க் மீதும்
மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் இந்த ஆட்சியால் அரை நூற்றாண்டு கால மோதல்கள் பரவியுள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள அரம்கோ எண்ணெய் வயல்களில் குண்டுவீசித் தாக்கியுள்ளது; பயங்கரவாதத்தையும், நாசவேலையையும், எல்லா இடங்களிலும் ஈரான் பரப்புகிறது என நெதன்யாகு கொந்தளித்துள்ளார்.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் என்றென்றும் போரைத் தடுப்பதற்காக மட்டுமே என நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், இன்று டெல் அவிவ் மீது தொடுக்கப்படும் தாக்குதல் நாளை நியூயார்க் மீதும் நடத்தப்படலாம் என்பதாலையே ஈரானுக்கு எதிராக களமிறங்க அமெரிக்காவை வலியுறுத்துவதாக நெதன்யாகு விளக்கமளித்துள்ளார்.
மேலும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர ஈரான் அமெரிக்காவை நாடியுள்ளதாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான கடந்த சில வார பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்காவை ஈரான் நெருக்கடியில் தள்ளியதாகக் குற்றம் சாட்டினார்.
மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடான இஸ்ரேல், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தையும், ஏவுகணைக் குவிப்பையும் தொடர்ந்து கட்டமைக்க விரும்புவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக மாறும் எந்த வாய்ப்பையும் ஈரானுக்கு அளிக்க முடியாது என நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |