இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம்: மன்னர் சார்லசுக்கு விடுத்துள்ள கோரிக்கை
இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பம், மன்னர் சார்லஸ் தங்களைசந்திக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
மன்னர் சார்லசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஏராளம் இளம்பெண்கள், சிறுமிகளை வேலை தருவதாக ஏமாற்றி, சீரழித்து, தன் நண்பர்களுக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
எப்ஸ்டீனுடைய நண்பர்களில் ஒருவர் பிரித்தானிய மன்னரான சார்லசுடைய தம்பி இளவரசர் ஆண்ட்ரூ.

இளவரசர் ஆண்ட்ரூவும் பெண்கள் வாழ்வில் விளையாடியதாக செய்திகள் வெளியாக, அவர் அதை மறுக்க, விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் இளம்பெண் வெளிப்படையாகவே ஆண்ட்ரூ மீது குற்றம் சாட்டினார்.
பருவம் எய்தாத வயதிலேயே தன்னுடன் ஆண்ட்ரூ உடல் ரீதியான உறவு கொண்டதாக விர்ஜினியா குற்றம் சாட்ட, ராஜ குடும்பம் தலைகுனிந்தது.
அதைத் தொடர்ந்து, எப்ஸ்டீன் குறித்த பல செய்திகள் வரிசையாக வெளியாகத் துவங்கின.
சமீபத்தில், அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிடத் துவங்கியது. அவற்றில் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த புகைப்படங்கள் உட்பட ஏராளமான ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது.
அவற்றில் பலவற்றில் ஆண்ட்ரூ, இளம்பெண்களுடன் நெருக்கமாக இருந்ததும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டார். தன் தம்பியை கைது செய்ய அனுமதிக்கும் அளவுக்கு எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றதாக மன்னர் சார்லசுக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.
இந்நிலையில், பிரித்தானிய மன்னரான சார்லஸ் இந்த மாத இறுதியில் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

அவர் அமெரிக்கா வர இருக்கிறார் என்று தெரிந்ததுமே, அவர் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்டு, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட விர்ஜினியாவின் குடும்பத்தினர், மன்னர் தங்களை சந்திக்கவேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.
அரண்மனை பதில்
ஆனால், மன்னர் சார்லஸ் அமெரிக்கா செல்லும்போது, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களையோ, விர்ஜினியாவின் குடும்பத்தினரையோ சந்திக்கமாட்டார் என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

எப்ஸ்டீன் தொடர்பில் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைகள் தொடர்வதால், அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவே மன்னர் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கமாட்டார் என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |