கரம் மசாலா கொண்டு சென்றதற்காக சிறையில் அடைக்கப்பட்ட நபர்: நீதிமன்றத்தின் முடிவு
கரம் மசாலா கொண்டு சென்றதற்காக தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
கரம் மசாலா கொண்டு சென்றதற்காக...
தொழிலதிபரான அஜய் சிங் என்பவர், மத்தியப்பிரதேசத்திலுள்ள போபாலிலிருந்து மலேசியா செல்வதற்காக டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.
போபால் விமான நிலையத்தில் அவரது உடைமைகளை வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் கண்டறியும் இயந்திரம் மூலமாக சோதனையிடும்போது, அந்த இயந்திரம் எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளது.

அதைத்தொடர்ந்து அஜயின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட, அவரது பை ஒன்றில் கரம் மசாலா பொடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதில் போதைப்பொருள் கலந்து அவர் எடுத்துச் செல்லக்கூடும் என சந்தேகித்த அதிகாரிகள், அஜயைக் கைது செய்துள்ளார்கள்.
அந்த கரம் மசாலா ஆய்வுக்காக போபாலிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட, அஜய் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
போபால் ஆய்வகம் தங்களிடம் அந்த பொடியில் போதைப்பொருள் கலந்துள்ளதா என்பதை அறியும் வசதிகள் தங்களிடம் இல்லை என்று கூற, அவற்றை ஹைதராபாதிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளார்கள்.
ஆய்வு முடிவுகள், அவை கரம் மசாலா மட்டுமே, அதில் எந்த போதைப்பொருளும் இல்லை என்று கூற, சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் அஜய்.

கடுமையான மன உளைச்சலுக்காளான அஜய், தான் சிறை செல்லக் காரணமாக இருந்த விமான நிலைய அதிகாரிகள், போதைப்பொருள் இருப்பதாக தவறாக கண்டறிந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனம் ஆகியவை மீது மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆனால், நீதிமன்றம் அதையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, அந்த கரம் மசாலாவில் போதைப்பொருள் கலந்துள்ளதா என்பதைக் கண்டறியும் ஆய்வகங்கள் இல்லாத மத்தியப்பிரதேச அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது நீதிமன்றம்.
அந்த ஆய்வகங்கள் உடனடியாக அந்த மசாலாவில் போதைபொருள் கலந்திருக்கவில்லை என கண்டறிந்திருந்தால் அஜய் இவ்வளவு நாட்கள் தேவையில்லாமல் சிறையில் செலவிட்டிருக்கவேண்டாமே என்னும் விடயத்தை மட்டும் கருத்தில் கொண்டுள்ள நீதிமன்றம் அஜய்க்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், அஜய் 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரியிருந்ததுடன், போதைப்பொருள் இருப்பதாக தவறாக கண்டறிந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
ஆனால், அந்த கோரிக்கைகள் எதையுமே நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |