இந்திய வம்சாவளி முதியவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரம்: மகளை விமர்சிக்கும் ஊடகங்கள்
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி முதியவர் ஒருவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரத்தில், ஒரு 15 வயது சிறுவன் மற்றும் ஒரு 13 வயது சிறுமிக்கு தண்டனை விவரம் வெளியாகியுள்ளது.
மிதித்தே கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியினர்
கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, தன் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த பீம் சென் கோலி (Bhim Sen Kohli, 80) என்னும் இந்திய வம்சாவளியினரான முதியவரை, ஒரு கூட்டம் சிறுவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளார்கள்.
ஐந்து சிறுவர்கள் கோலியை சூழ்ந்துகொண்டு, அவரை இனரீதியாக விமர்சித்ததுடன், அவரை மிதித்துக் கீழே தள்ளி, அவரது கழுத்திலும் முதுகெலும்பிலும் மாறி மாறி மிதித்துள்ளார்கள்.
அந்த சிறுவர்கள் குற்றுயிராக கோலியை விட்டு விட்டு ஓட்டம் பிடிக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோலி, கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துவிட்டார்.
கோலி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை முன்னர் நடத்திவந்துள்ளார்.
இரண்டு பேருக்கு தண்டனை
இந்த வழக்கில் ஒரு 15 வயது சிறுவன் மற்றும் ஒரு 13 வயது சிறுமிக்கு மட்டும் தண்டனை விவரம் வெளியாகியுள்ளது.
அந்த 15 வயது சிறுவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுமி சிறைத்தண்டனையிலிருந்து தப்பிவிட்டாள்.
அந்த சிறுமிக்கு மூன்று ஆண்டுகளுக்கு இளைஞர் மறுவாழ்வு ஆணை (youth rehabilitation order) என்னும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மகளை விமர்சிக்கும் ஊடகங்கள்
இந்நிலையில், கோலியின் மகளை ஊடகங்கள் இரக்கமில்லாதவர் என விமர்சித்துள்ளன.
உண்மையில், சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு அந்த சிறுமி கோலியை புகைப்படம் எடுத்துள்ளாள்.
சம்பவம் நடந்த அன்று அந்த புகைப்படத்தை அந்த 15 வயது சிறுவனுக்கு அவள் காட்ட, அவள் முன் தன்னை பெரிய ஆள் போல காட்டுவதற்காக அந்த சிறுவன் கோலியைத் தாக்கியுள்ளான்.
அப்போது அந்த சிறுமி, கோலியை தாக்குமாறு அந்த சிறுவனை உற்சாகப்படுத்தியுள்ளாள், அவர் அடிவாங்குவதைப் பார்த்து அவள் சிரித்ததுடன், அந்த சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளாள்.
என் தந்தையை இப்படி கொடூரமாகத் தாக்கிக் கொன்றவர்களை மன்னிப்பது கடினம் என்று கூறியுள்ள கோலியின் மகளான சூசன் கோலி, இப்படிப்பட்டவர்களுக்கு ஏன் கருணை காட்டப்படவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்களுடைய தண்டனைக்காலம் முடிந்த பிறகும் அவர்களுக்கு வாழ்க்கை உள்ளது. அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடரமுடியும். ஆனால், எங்களால் அது முடியாதே என்று கூறியுள்ளார் அவர்.
அத்துடன், ஒரு அப்பாவி முதியவரை அவர்கள் தாக்க முடிவு செய்துள்ளார்கள். அதனால் அவர்களுக்கு என்னால் இரக்கம் காட்டமுடியாது என சூசன் கூறியுள்ள நிலையில், அவரை இரக்கமற்றவர் என பிரித்தானிய ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |