ட்ரம்பின் எச்சரிக்கையை மீறி... கியூபாவிற்கு உதவிகள் அனுப்பிய பெண் ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்பின் பொருளாதார அழுத்தங்களால் மோசமடைந்து வரும் நெருக்கடிக்கு மத்தியில், கியூபாவை ஆதரிக்கும் மெக்சிகோவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மனிதாபிமான உதவிகளுடன் இரண்டு மெக்சிகன் கடற்படைக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக உதவிகள்
இரு கப்பல்களும் 800 டன்களுக்கும் அதிகமான பொருட்களுடன் கியூபாவை எட்டியுள்ளது. கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் அல்லது வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரிகளை விதிக்க அமெரிக்காவை அனுமதிக்கும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு மெக்சிகோ இந்த உதவிகளை முன்னெடுத்துள்ளது.

இதனிடையே, மெக்சிகோவின் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் வியாழக்கிழமை தெரிவிக்கையில், தனது அரசாங்கம் கியூபாவிற்கு எண்ணெய் அனுப்புவதை மீண்டும் தொடங்க அனுமதிக்க இராஜதந்திர நடவடிக்கைகளை நாடுவதாகக் கூறினார்.
அத்துடன், கியூபாவிற்கு அனுப்பப்பட்டுள்ள கப்பல்கள் நாடு திரும்பியதும், மேலதிக உதவிகள் முன்னெடுக்கப்படும் என்றார். மெக்சிகோவின் Isla Holbox கப்பலில் பால், அரிசி, பீன்ஸ், மத்தி, இறைச்சி பொருட்கள், குக்கீகள், பதப்படுத்தப்பட்ட டுனா மற்றும் தாவர எண்ணெய், அத்துடன் தனிப்பட்ட சுகாதாரப் பொருட்கள் உட்பட சுமார் 536 டன் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
மெக்சிகன் அரசாங்கத்தின் தகவலின் அடிப்படையில், பப்பலோபன் கப்பல் 277 டன்களுக்கு மேல் பால் பவுடர் அனுப்பப்பட்டுள்ளது. கியூபாவிற்கு எண்ணெய் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மெக்சிகோ அடிபணிந்தாலும், அதன் கடுமையான தேவையின் தருணத்தில் அந்த நாட்டிற்கு உதவ மெக்சிகோவின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மெக்ஸிகோ கல்லூரியில் கியூப வரலாற்றாசிரியர் ரஃபேல் ரோஜாஸ் தெரிவிக்கையில், கியூபாவுடனான மெக்சிகோவின் உறவு 19 ஆம் நூற்றாண்டு வரை நீண்டுள்ளது, அப்போது இரு நாடுகளிலும் ஸ்பெயினிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான புரட்சிகள் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெயர்வு அலைகளைக் கண்டன.

ட்ரம்பின் அழுத்தம்
1952 முதல் 1959 வரை நீடித்த ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவின் சர்வாதிகாரத்தின் போது கியூபாவிலிருந்து மெக்சிகோவிற்கு இடம்பெயர்வு மீண்டும் அதிகரித்தது. மெக்சிகோவுக்குக் குடிபெயர்ந்தவர்களில் பிடல் மற்றும் ரவுல் காஸ்ட்ரோ மற்றும் அர்ஜென்டினாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட எர்னஸ்டோ சே குவேரா ஆகியோரும் அடங்குவர்.
1955 ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் காஸ்ட்ரோ சகோதரர்களை சே குவேரா சந்தித்தார். அவர்கள் ஒன்றாக, கியூபப் புரட்சியாக மாறியதைத் திட்டமிடத் தொடங்கினர், அது 1959 இல் பாடிஸ்டாவை வீழ்த்தியது. அதன் பிறகு, அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணியாத மற்றும் கியூபாவுடன் உறவுகளைப் பேணி வந்த பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று என அவர் பதிவு செய்துள்ளார்.

தற்போது ட்ரம்பின் அழுத்தம் காரணமாக மெக்சிகோ கியூபாவிற்கு எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய பிறகும், அதை ஒரு இறையாண்மை முடிவு என்று விளக்கமளிக்க ஷீன்பாம் சிரமப்பட்டார்.
கியூபாவின் எரிபொருள் நெருக்கடி ஆழமடைந்து வருவதால், தனது அரசாங்கம் கியூபா எண்ணெய் பெற அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |