அடிமைமுறை உட்பட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்: தாயார், மகள் மீது வழக்கு
சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் ஆட்சியின்போது, அடிமைமுறை சார்ந்த குற்றங்கள் உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு அவுஸ்திரேலியப் பெண்கள், மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மனிதகுலத்திற்கு எதிரான
அப்பாஸ் என்று அறியப்படும் 53 வயதான கவ்ஸர் அகமது மற்றும் அவரது மகள் 31 வயதான ஜைனப் அகமது ஆகியோர், வியாழக்கிழமையன்று மெல்போர்ன் விமான நிலையத்தில், விக்டோரிய கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், 32 வயதான ஜனாய் சஃபர் என்ற மூன்றாவது பெண் ஒருவரும் அறிவிக்கப்பட்ட போர் மண்டலத்திற்குள் நுழைந்து, ஒரு பயங்கரவாத அமைப்பில் இணைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, வெள்ளிக்கிழமையன்று சிட்னி நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவ்சர் மற்றும் ஜைனப் அகமது ஆகியோர், அடிமைப்படுத்துதல் மற்றும் ஒரு அடிமையை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, சிரியா நாட்டில் ஒரு அடிமையை உடன் வைத்திருந்ததாகவும், அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் கவ்ஸர் அகமது மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
அந்தத் தாயாரும் மகளும் 2014-ஆம் ஆண்டில் தங்கள் குடும்பத்துடன் சிரியாவுக்குப் பயணம் செய்ததாகவும், தெரிந்தே ஒரு அடிமைப் பெண்ணைத் தங்கள் வீட்டில் வைத்திருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிணைக்கு எதிர்ப்பு
மேலும், தனது கணவருடன் சிரியாவுக்குப் பயணம் மேற்கொண்ட 53 வயது கவ்ஸர் அகமது, 10,000 அமெரிக்க டொலருக்கு ஓர் அடிமைப் பெண்ணை வாங்கியதில் உடந்தையாக இருந்தார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அடிமைப்படுத்தும் குற்றங்கள் ஒவ்வொன்றிற்கும் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். வெள்ளிக்கிழமை அன்று தலைமை நீதிபதி லிசா ஹன்னன் முன்னிலையில் இருவரும் தனித்தனியாக ஆஜராகும் நிலையில், திங்கட்கிழமை அன்று அவர்கள் பிணை கோரி விண்ணப்பிப்பார்கள் என மெல்போர்ன் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், இந்தக் குற்றங்கள் பயங்கரவாதம் தொடர்பானவை என்பதால், அவர்கள் பிணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கவ்ஸர் அகமதின் மூத்த மகளான 33 வயது ஜஹ்ரா அகமது கைது செய்யப்படவோ அல்லது அவர் மீது குற்றம் சாட்டப்படவோ இல்லை. அந்தப் பெண் எட்டு குழந்தைகளுடன் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |