ஆண்டுக்கு 29.2 கிலோ தங்கத்தை காற்றில் வெளியிடும் எரிமலை - எங்கே தெரியுமா?
எரிமலை ஒன்று ஆண்டுக்கு 29.2 கிலோ தங்கத்தை காற்றில் வெளியிடுகிறது.
தங்கத்தை காற்றில் வெளியிடும் எரிமலை
அண்டார்டிகாவில் ராஸ் தீவில் உள்ள எரெபஸ் மலை, தூய தங்க நுண் படிகங்களை காற்றில் வெளியிடும் உலகின் ஒரே எரிமலையாக உள்ளது.

பூமியின் தென்கோடியில் உள்ள செயல்படும் எரிமலையான இந்த எரிமலை, சுமார் 1.3 மில்லியன் ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
கடந்த 1991 ஆம் ஆண்டில் நடத்தபட்ட ஆய்வில், இந்த எரிமலை ஒவ்வொரு நாளும் சுமார் 80 கிராம் தங்க நுண்படிவங்களை வெளியிடுகிறது
இதன் இன்றைய மதிப்பு ஒரு நாளைக்கு சுமார் ரூ.5.66 லட்சம் ஆகும். இவ்வாறாக ஆண்டுக்கு 29.2 கிலோ தங்கத்தை வெளியிடுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.38 கோடி ஆகும்.
இந்த தங்க தூசிகள் அண்டார்டிகா பனியில் படுவதற்கு முன்னர் 1,000 கிமீ வரை காற்றில் பரவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.
ஹவாயில் உள்ள கிலாவேயா, இத்தாலியில் உள்ள எட்னா, அலாஸ்காவில் உள்ள அகஸ்டின் மற்றும் மெக்சிகோவில் உள்ள எல் சிச்சோன் ஆகிய இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கூட மிகச்சிறிய அளவிலான தங்கம் வேதியியல் முறையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் ஹவாயில் உள்ள கிலாவேயா ஒரு நாளைக்கு 500 முதல் 800 கிராம் தங்கம் வரை வெளியிட்டதாக மதிப்பிடப்பட்டது. அதேவேளையில் இத்தாலியில் உள்ள எட்னா 2.4 கிலோகிராம் வரை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
உயர் வெப்பநிலை எரிமலை வாயுக்களில் உள்ள குளோரின் அல்லது கந்தகச் சேர்மங்களுடன் தங்கம் இணையும்போது அது மேற்பரப்பிற்கு வருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆனால், அமெரிக்காவின் நியூ மெக்சிகோ சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த புவி வேதியியலாளர் கிம்பர்லி மீக்கர் தலைமையிலான குழு, எரெபஸ் எரிமலைத் தங்கம் வேறு எந்த எரிமலையிலும் காணப்படாத ஒன்றாக உள்ளது என தெரிவித்துள்ளது.
எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி, ஆய்வு செய்தபோது அந்த துகள்கள் ஒழுங்கற்ற புள்ளிகளாகத் தோன்றாமல், ஏறக்குறைய கச்சிதமான சுமார் 60 மைக்ரோமீட்டர் குறுக்களவு படிகங்களாகக் காட்சியளித்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
என்ன காரணம்?
இதில் இவ்வாறு வெளியாகும் தங்கம் தொடர்பில் ஆராய்ச்சியாளர்களிடையே இரு வேறு கருத்துக்கள் உள்ளது.

இதன்படி, தங்கம் ஆவியாகும் குளோரின் கொண்ட சேர்மங்களில் எரிமலைக்குழம்பிலிருந்து வெளியேற்றப்படுகிறது. அந்த வாயுக்கள் குளிர்வடையும்போது, தங்கம் இந்தச் சேர்மங்களிலிருந்து படிகமாகி, இறுதியில் அண்டார்டிக் பனியில் நிலைபெறுகிறது.
ஆனால் அந்த வாயுக்களில் தங்கம் மிகக் குறைவாகவே உள்ளது. அத்தகைய சூழலில், காற்றில் உருவான படிகங்கள் தன்னிச்சையாகக் உருவம் அடைவது மிகவும் கடினம்.
இந்தத் தங்கப் படிகங்கள் முதலில் எரிமலைக்குழம்பு ஏரியின் மேற்பரப்பில் மெதுவாக உருவாகி, பின்னர் எரிமலை வாயுக்களுடன் காற்றில் பறந்து செல்கின்றன என்றும் நம்பப்படுகிறது.
எரெபஸ் மலைச் சமவெளியிலிருந்து தங்க நுண்துகள்களைச் சேகரிப்பது சாத்தியமானதாக இருந்தாலும்கூட, அவ்வாறு சேகரிக்கப்படும் தங்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் கடத்தல் பொருளாகவே கருதப்படும்.
அண்டார்டிக் ஒப்பந்தம், அறிவியல் ஆராய்ச்சியைத் தவிர, கனிம வளங்கள் தொடர்பான வேறு எந்தச் செயலையும் தடை செய்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |