இலங்கை உடனான தோல்வி எதிரொலி - வங்கதேச டெஸ்ட் அணித்தலைவர் நஜ்முல் ராஜினாமா
வங்கதேச டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து நஜ்முல் விலகியுள்ளார்.
டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை
இலங்கை சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 T20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில், இரு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைய, 2வது டெஸ்ட்டில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
பதவி விலகிய நஜ்முல் ஷாண்டோ
இந்நிலையில், தோல்வி எதிரொலியாக வங்கதேச டெஸ்ட் அணியின் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து, நஜ்முல் ஷாண்டோ ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நஜ்முல், "டெஸ்ட் அணியின் அணித்தலைவராக தொடர விரும்பவில்லை. இது தனிப்பட்ட விடயம் அல்ல. அணியின் முன்னேற்றத்திற்காக நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
3 வடிவங்களுக்கு 3 அணித்தலைவர் என்ற நடைமுறை சரியென எனக்குத் தோன்றவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் என்ன நினைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, மேலும் அவர்களின் முடிவை நான் ஆதரிப்பேன்." என தெரிவித்துள்ளார்.
வங்கதேச ஒருநாள் அணியின் அணித்தலைவராக மெஹ்தி ஹசன் மிராஸும், டி20 அணியின் அணித்தலைவராக லிட்டன் தாஸும் செயல்பட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |